மதம் மாற கட்டாயப்படுத்தியதால் மாணவி தற்கொலை: மாணவியின் பெற்றோர் நீதிபதியிடம் வாக்குமூலம்!
![மதம் மாற கட்டாயப்படுத்தியதால் மாணவி தற்கொலை: மாணவியின் பெற்றோர் நீதிபதியிடம் வாக்குமூலம்! மதம் மாற கட்டாயப்படுத்தியதால் மாணவி தற்கொலை: மாணவியின் பெற்றோர் நீதிபதியிடம் வாக்குமூலம்!](https://kathir.news/h-upload/2022/01/24/1316214-than-sc.webp)
அரியலூர் மாவட்டம், வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருக்கு 17 வயதில் பெண் குழந்தை உண்டு. இதனிடையே தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு முதல் அவருடைய முருகானந்தனின் பெண் குழந்தை படித்து வந்தார்.
மேலும், பள்ளியில் இருந்து மாணவியின் வீடு தூரமாக இருப்பதால் பள்ளியின் விடுதியிலேயே தங்கி படித்து வந்தார். தற்போது மாணவி 12ம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே மாணவி திடீரென்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதனை தொடர்ந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவியை சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே உயிரிழக்கும் சமயத்தில் மாணவி பேசிய வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தன்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதற்கு கட்டாயப்படுத்தினர். நான் மதம் மாறுவதற்கு விருப்பம் இல்லை என்று கூறியபோது, தன்னை விடுதிகளை சுத்தம் செய்ய வைப்பது, கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தினர். இது போன்ற நிறைய கொடுமைகளை எனக்கு பள்ளி நிர்வாகம் கொடுத்தது. இதனால் தனக்கு மிகப்பெரிய மன உளைச்சல் ஏற்பட்டது. இதனாலேயே விஷம் குடிக்க நேரிட்டது என மாணவி கண்ணீருடன் தனது மரண வாக்கு மூலத்தை பதிவு செய்தார்.
இவரது மரணத்துக்கு நீதி வேண்டி பாஜகவினர் இந்து அமைப்புகள் கடந்த சில நாட்களாக பல்வேறு முறையில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இறந்த மாணவியின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மாணவியை கட்டாயப்படுத்தி மதமாற வற்புறுத்திய பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மதமாற்றம் செய்வதை தடுக்கும் விதமாக சட்டம் இயற்ற வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
மேலும், மாணவி மதமாற்றத்தால் தற்கொலை செய்து கொண்டார் என பாஜக சார்பில் தஞ்சை எஸ்.பி. ரவளிபிரியாவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் மாஜிஸ்திரேட்டிடம் போலீசாரிடமும் மாணவியின் வாக்குமூலத்தில் மதம் மாற்றம் தொடர்பான தகவல் இல்லை என்று எஸ்.பி. கூறினார். இவரது கருத்துக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக மாணவியின் தந்தை முருகானந்தம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் விசாரணை செய்து, மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொள்ள வேண்டும். மாணவி மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதற்கான வாக்குமூலங்களை பெற்றோர்கள் மாஜிஸ்திரேட்டு முன்பாக ஆஜராகி அவர்களுடைய மகள் தெரிவித்த தகவலை கூற வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், மாணவியின் பெற்றோர்கள் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா ஆகியோர் தஞ்சை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதி பாரதி முன்பாக நேற்று வாக்கு மூலம் அளித்தனர். இவர்களின் வாக்கு மூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட இருக்கிறது.
Source, Image Courtesy: Daily Thanthi