தருமபுரி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை 2 நாளில் மீட்கப்பட்டது எப்படி.. பரபரப்பு தகவல்.!
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 20ம் தேதி ஆண் குழந்தையை கடத்தி சென்ற நிலையில், போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By : Thangavelu
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 20ம் தேதி ஆண் குழந்தையை கடத்தி சென்ற நிலையில், போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள நாச்சானூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள்மணி, இவர் தச்சு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மாலினி, நிறைமாத கர்பிணியாக இருந்த அவரை பிரசவத்திற்காக கடந்த 18ம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதனிடையே கடந்த 19ம் தேதி மாலினிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து 20ம் பிரசவ வார்டில் இருந்த மாலினி கழிவறைக்கு சென்றுள்ளார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை படுக்கையில் இல்லாததால் மிகவும் உடைந்து போனார்.
இது பற்றி உடனடியாக தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நைட்டி உடையுடன் ஒரு பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு, ஒரு ஆணுடன் பைக்கில் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதனையடுத்து அந்த புகைப்படத்தை வைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் தருமபுரி டவுன் பிடமனேரி பகுதியை சேர்ந்த ஜான்பாஷா மற்றும் அவரது மனைவி தஞ்சையா இரண்டு பேரும் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும், கடத்தப்பட்ட குழந்தை பென்னாகரம் செல்லும் வழியில் உள்ள இண்டூரில் உள்ள தஞ்சையாவின் தாய் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது.
உடனடியாக தனிப்படை போலீசார் இண்டூருக்கு சென்று தஞ்சையாவின் வீட்டை சுற்றி வளைத்து குழந்தையை மீட்டு, ஜான்பாஷா மற்றும் அவரது மனைவி தஞ்சையா, அவரது அம்மா ரேஷ்மா மற்றும் பாட்டி பேகம் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அப்போது போலீசார் நடத்தப்பட்ட விசாரணையில் தஞ்சையா 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, கருசிதைவு ஏற்பட்டது.
தொடர்ந்து சில நாட்களாக பிரசவவார்டி சிகிச்சை பெற்று வந்திருந்தபோது, மாலினிக்கு குழந்தை பிறந்து அதே வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மாலினி கழிவறைக்கு சென்றபோது குழந்தையை கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் முன்னிலையில் மீட்கப்பட்ட ஆண் குழந்தையை அவரது பெற்றோர் அருள்மணி மற்றும் அவரது தாயிடம் ஒப்படைத்தார்.
அப்போது குழந்தையை மீட்டுக்கொடுத்த மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் காலில் விழுந்து அருள்மணி நன்றி தெரிவித்தார். மற்றும் சக காவலர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார். கடத்தப்பட்ட குழந்தையை 2 நாட்களிலேயே மீட்ட போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
