அரசு அறிவித்த ரூ.2,000 எங்கே.. தருமபுரி அருகே ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் போராட்டம்.!
அரசு அறிவித்த பொருட்களை ஏன் பொதுமக்களுக்கு வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By : Thangavelu
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகாவிற்குட்பட்ட பாலவாடி நியாயவிலைக்கடையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.4,000 கொரோனா நிவாரண நிதி ஒவ்வொரு அரிசி அட்டைதார்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதன்படி கடந்த மே மாதம் ரூ.2,000 நிவாரணத்தொகை வழங்கப்பட்டு விட்டது. இந்த ஜூன் மாதம் வழங்கப்பட வேண்டிய நிவாரணத்தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. பாலவாடி நியாய விலைக்கடையில் கூரம்பட்டி, சவுளூர், மொளப்பனம்பட்டி, பாலவாடி உள்ளிட்ட கிராமங்கள் சேர்ந்துள்ளது. இதில் பாதி பேருக்கு நிவாரணத்தொகை வழங்கியுள்ளனர். அதில் 14 வகை பொருட்களில் எண்ணெய், சோப்பு, மிளகாய்தூள் உள்ளிட்ட பொருட்கள் இல்லாமல் கொடுத்தனர்.
அதே போன்று இன்னும் 350க்கும் மேற்பட்டோருக்கு நிவாரணத்தொகையும் மற்றும் 14 வகை பொருட்களும் வழங்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நியாயவிலைக்கடை முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் 300க்கும் மேற்பட்டோர்கள் ஒரே இடத்தில் கூடியதால் பரபரப்பான சூழல் நிலவியது.
அரசு அறிவித்து கிட்டத்தட்ட 25 நாட்களுக்கு மேல் கடந்துவிட்டது. இன்னும் நிவாரணமும் வழங்கவில்லை மற்றும் மத்திய அரசு அறிவித்த அரிசியும் பொதுமக்களுக்கு வழங்கவில்லை. கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரதமர் மோடி வருகின்ற நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால் தருமபுரி மாவட்டத்தில் பல இடங்களில் கூடுதலான அரிசி வழங்கப்படாமல் இருப்பது பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு அறிவித்த பொருட்களை ஏன் பொதுமக்களுக்கு வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
