கொரோனாவால் தாயை இழந்து துபாயில் தவித்த குழந்தை திருச்சியில் தந்தையிடம் ஒப்படைப்பு.!
குடும்ப வறுமை காரணமாக கடந்த மார்ச் மாதம் 10 மாதமான தனது மூன்றாவது கைக்குழந்தையான தேவேஷ் உடன் பாரதி துபாய்க்கு வீட்டு வேலைக்காக சென்றார். அங்கு சென்று ஒரு மாதமாக வீட்டு வேலை செய்து வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

By : Thangavelu
துபாயில் வீட்டு வேலைக்கு சென்ற பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்துவிட அவரது கைக்குழந்தை விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு தந்தையிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சித்தேரி பகுதியை சேர்ந்தவர் வேலன் 38, இவரது மனைவி பாரதி 36, ஆகிய இருவருக்கும் திருமணமாகி, மூன்று ஆண் குழந்தைகளில் முதல் குழந்தை உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டது. இதனிடையே குடும்ப வறுமை காரணமாக கடந்த மார்ச் மாதம் 10 மாதமான தனது மூன்றாவது கைக்குழந்தையான தேவேஷ் உடன் பாரதி துபாய்க்கு வீட்டு வேலைக்காக சென்றார். அங்கு சென்று ஒரு மாதமாக வீட்டு வேலை செய்து வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதுனை தொடர்ந்து அவர் அங்குள்ள மருத்துவமனையில் சுமார் 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த மே 29ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் பின்னர் தனது தாயை பறிக்கொடுத்த கைக்குழந்தையான தேவேஷ் துபாயில் பறிதவித்து வந்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்த துபாய் திமுக அமைப்பாளர் மீராமிதுன் இந்திய தூதரகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இது பற்றி தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து குழந்தை தேவேஷை பயணி ஒருவர் மூலம் நேற்று துபாயிலிருந்து திருச்சிக்கு அழைத்து வரப்பட்டு, அவரது தந்தை வேலனிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை பார்த்த சந்தோஷத்தில் வேலன் முத்தம் கொடுத்து கண்ணீர் மல்க தூக்கி அணைத்துக்கொண்டார். இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களிடம் கண்ணீரை வரவழைத்தது.
