தமிழ்நாட்டில் மேலும் 300 இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் மையங்கள்: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு
இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் தமிழ்நாட்டில் மேலும் 300 இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும் என்று அதன் செயல் இயக்குனர் வி.சி அசோகன் அறிவித்துள்ளார்.
By : Karthiga
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் செயல் இயக்குனர் தலைவர் வி.சி அசோகன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூபாய் 54,000 கோடி முதலீடு செய்துள்ளது. இதில் நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணத்தில் ஆண்டுக்கு ஒன்பது மில்லியன் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை முக்கியமானதாகும். இந்த திட்டத்துக்கு மட்டும் ரூபாய் 34,000 கோடி செலவு செய்துள்ளோம். இந்தியன் ஆயில் நிறுவனம் பெட்ரோல் டீசரை தவிர்த்து, சி என்.ஜி, எல்.என்.ஜி, எத்தனால், 'பயோடீசல்' போன்ற எரிபொருட்களையும் பிரபலப்படுத்தி வருகிறது.
சமீபத்தில் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை 26 பெட்ரோல் நிலையங்களில் அறிமுகம் செய்துள்ளோம். தொலைதூரம் செல்லும் பஸ்கள் சரக்கு வாகனங்களுக்கு இயற்கை திரவ எரிவாயுவை ஒரு எரிபொருளாக பிரபலப்படுத்த இருக்கிறோம். அந்த வகையில் தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் , ஓசூர், நாமக்கல், மதுரை கோவை ஆகிய 6 இடங்களில் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் எல்.என்.ஜி மையங்களை திறக்க உள்ளோம்.
இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் மையங்கள் தமிழ்நாட்டில் 400 இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மேலும் 300 சார்ஜிங் மையங்களை அமைக்க உள்ளோம். தமிழ்நாட்டில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் புதிதாக 1875 பெட்ரோல் நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோலியங்களிலும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும்.
வணிக வளாகங்கள், மால்கள் போன்ற இடங்களிலும் சார்ஜிங் மையங்கள் அமைக்க முயற்சி மேற்கொண்டிருக்கும். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் சார்ஜிங் மையத்தில் ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 24 கட்டணம் ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE :DAILY THANTHI