போலி பத்திரப்பதிவு மூலம் கோவில் நிலங்கள் அபகரிப்பு - முதற்கட்ட விசாரணையில் 30 ஆயிரம் பத்திரங்கள் அம்பலம்
தமிழகத்தில் கோவில் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன என தணிக்கை துறையின் அறிக்கையில் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

By : Mohan Raj
தமிழகத்தில் கோவில் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன என தணிக்கை துறையின் அறிக்கையில் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் உரிமையாளருக்கு தெரியாமல் ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவணங்களை பயன்படுத்தி சொத்து அபகரிப்பு செய்தது தொடர்பான புகார்கள் வருகின்றன. இதுபோன்ற மோசடியில் தொடர்புள்ள பத்திரங்களை மாவட்ட பதிவாளர் ரத்து செய்யும் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் அங்கீகாரம் இல்லாத மனை விற்பனை, பத்திரங்கள் பதிவு செய்வது குறித்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வருகிறது. முதல் கட்ட விசாரணையில் 30 ஆயிரம் பத்திரங்கள் பதிவாகி இருப்பதாக பதிவுத்துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதில் சம்பந்தப்பட்டதாக 130 சார் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகள் துவங்கியுள்ளன. இதன் மோசடிப் புகார்கள் அடிப்படையில் திருநெல்வேலி மண்டலத்தில் 85 புகார்களும், சென்னை மண்டலத்தில் 59 என மொத்தம் 144 சார் பதிவாளர் அலுவலகங்களில் சிறப்பு தணிக்கை குழு ஆய்வு மேற்கொள்ள பதிவு துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை மண்டலத்தில் இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிலம், அரசு நிலம் தொடர்பான நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டு அது தொடர்பாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. சிறப்பு தணிக்கை கால அவகாசமும் குறைவாக இருப்பதால், முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை எனவும் இதற்கு கூடுதல் அவகாசம் அளிப்பதுடன் கூடுதல் அதிகாரிகளை அமர்த்தி தீவிர ஆய்வு மேற்கொண்டால் மோசடி குறித்த தகவல்கள் தெரிய வரும் எனவும் பத்திர பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது.
