பறிமுதல் செய்த மதுபாட்டில்களை விற்றதாக இன்ஸ்பெக்டர், ஏட்டு பணியிடை நீக்கம்.!
பறிமுதல் செய்த மது பாட்டில்களின் எண்ணிக்கை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் அனைத்தும் வெளியில் கொண்டு சென்று ரூ. 2 லட்சத்திற்கும் மேற்பட்டு விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

By : Thangavelu
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை விற்ற புகாரில், சிறுகனூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகததில் கடந்த மாதம் முதல முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது வாகனங்களில் சுற்றுபவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.
அது மட்டுமின்றி சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தவர்கள் நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதே போன்று திருச்சி மாவட்டம், சிறுகனூர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி அதிகமான விலைக்கு விற்பனை செய்தவர்களை இன்ஸ்பெக்டர் சுமதி கைது செய்து அவர்களிடம் இருந்த 1,700-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.
ஆனால் பறிமுதல் செய்த மது பாட்டில்களின் எண்ணிக்கை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் அனைத்தும் வெளியில் கொண்டு சென்று ரூ. 2 லட்சத்திற்கும் மேற்பட்டு விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனிடையே திருச்சி மண்டல போலீஸ் ஜஜி பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் எஸ்.பி. பால்வண்ணநாதன் சிறுகனூர் காவல் நிலையத்தில் சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டதில் குற்றச்சாட்டு உறுதியானது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் சுமதி, ஏட்டு ராஜா ஆகியோரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து ஜஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
