ஓசூரில் பரபரப்பு: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி கொள்ளை.!
ஓசூர் மூகண்டபள்ளி எம்.எம்.நகர் பகுதியை சேர்ந்தவர் மாதையன். இவர் அரபு நாட்டில் கிரானைட் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
By : Thangavelu
ஓசூரில் 700 சவரன் தங்க நகைகள், 40 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூகண்டபள்ளி எம்.எம்.நகர் பகுதியை சேர்ந்தவர் மாதையன். இவர் அரபு நாட்டில் கிரானைட் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனிடையே கடந்த 2019ம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர் குடும்பத்துடன் ஓசூரில் வசித்து வருகிறார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது சொந்த ஊரான, தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்திற்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நேற்று இரவு அவர் வசித்து வந்த வீட்டில் நுழைந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். அப்போது, வீட்டில் இருந்த 700 சவரன் தங்க நகைகள் மற்றும் 40 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் வீட்டு வேலைக்கு வந்த பெண், வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதன் பின்னர் தனது ஓனர் மாதையனுக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தொழிலதிபர் மாதையன் உடனடியாக ஓசூர் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது பற்றி சிப்காட் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலை தொடர்ந்து போலீசார் மோப்பநாயுடன் சென்று வீட்டை சோதனை செய்தனர். கைரேகை நிபுணர்களுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டி கங்காதர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார். ஓசூரில் தொழிலதிபர் வீட்டில் நகை கொள்ளைபோன சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.