திருப்பத்தூர்: தூய்மை பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா.!
மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், ஒப்பந்த தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக உடன்பாடு எட்டப்பவில்லை. தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By : Thangavelu
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியில் 90க்கும் அதிகமானோர்கள் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நிலுவைத் தொகை மற்றும் நடப்பு ஆண்டிற்கான சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு வகையிலான கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி ஆணையாளரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனிடையே கடந்த மாதம் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய ஆணையாளர் விரைவில் கோரிக்கைளை பரிசீலீப்பதாக உறுதி அளித்துள்ளார்.
ஆனால் இதுவரை ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு வகையிலான கோரிக்கைகளை நிறைவேற்றப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
அங்கிருந்த அதிகாரிகள், ஆட்சியர் வந்த பின்னர் அவரிடம் மனுகொடுக்கலாம் என கூறியுள்ளனர். ஆனால் அதனை ஏற்றுகொள்ளாத தூய்மை பணியாளர்கள் ஆட்சியர் வரும்வரை அங்கிருந்து கலைந்து செல்லமாட்டோம் என்று கூறி தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், ஒப்பந்த தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக உடன்பாடு எட்டப்பவில்லை. தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
