கோவை: 50 குடும்பங்களுக்கு அத்தியாவசிப் பொருட்கள் வழங்கிய விமானப்படை அதிகாரிகள்.!
கோவை, சூலூரில் உள்ள இந்திய விமானப்படை அதிகாரிகள் சார்பில் முழு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

By : Thangavelu
கோவை, சூலூரில் உள்ள இந்திய விமானப்படை அதிகாரிகள் சார்பில் முழு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் அப்பாவி ஏழை மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் உணவின்றி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. இது போன்ற இடங்களில் அதிமுக, பாஜக, உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் உதவி செய்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு பல இடங்களில் எழுந்துள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் அதிகமான பாதிப்புகளை சூலூர் பகுதி சந்தித்துள்ளது. அங்கு வாழும் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
அதில், காடாம்பாடி, காங்கேயம் பாளையம், செங்கத்துறை ஆகிய பகுதிகள் சூலூர் விமானப்படை தளத்துக்கு அருகாமையில் உள்ளது. இதனிடையே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியே வராதபடி போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இது பற்றி தகவல் அறிந்த விமானப்படைத்தள நல்வாழ்வு சங்கம் சார்பில், அரிசி மற்றும் காய்கறி தொகுப்புகள் அடங்கிய நிவாரண பொருட்களை சுமார் 50 குடும்பங்களுக்கு வழங்கியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியானது காங்கேயம் பாளையத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. அங்கு பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு, நிவாரணப் பொருட்களை விமானப்படை அதிகாரிகள் வழங்கினர். இதற்கு அப்பகுதி மக்கள் விமானப்படை அதிகாரிகளுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
