சொகுசு வாழ்க்கை வாழ.. ஓசூரில் சிகரெட் கம்பெனி நிர்வாகியை கடத்திய கும்பல் கைது.!
சொகுசு வாழ்க்கை வாழ.. ஓசூரில் சிகரெட் கம்பெனி நிர்வாகியை கடத்திய கும்பல் கைது.!
By : Kathir Webdesk
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி தர்கா பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல சிகரெட் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வந்த பீட்டல் லூயிஸ் 43, என்பவர் கடந்த டிசம்பர் 2ம் தேதியன்று தர்கா முத்துமாரியம்மன் கோவில் அருகே வீட்டிற்கு இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை 6க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று காரில் கடத்தி சென்றது. இதனை பின்னால் வந்த உதவி மனிதவள மேம்பாட்டுதுறை அதிகாரியான கௌரி என்பவர் பீட்டர் லூயிஸ் கடத்தி செல்வதை அறிந்து கூச்சல் போட்டார். அப்போது கோவில் அருகே இருந்த காவலாளி காரை தடுத்து நிறுத்த முற்பட்டபோது கார் நிறுத்தாமல் சென்றது.
பின்னர் பீட்டர் லூயிஸ் குடும்பத்தார் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பீட்டர் லூயிஸை கடத்திய கும்பல் அவரிடம் 2 கோடி ரூபாய் பணத்தை கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. கடத்தப்பட்ட சம்பவம் போலிசாருக்கு தெரியவந்ததை அறிந்த கொள்ளை கும்பல் கிருஷ்ணிகிரியில் இறக்கி விட்டு தப்பி சென்றது.
சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் செல்போன் டவர்களை கொண்டு சிப்காட் போலிசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 8 இளைஞர்கள் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க கடத்தியது தெரியவந்தது. அமரேஷ் 28, தியாகராஜன் 32, குருபிரசாத் 26, வினோத்குமார் 30, நதீம் அகமது 22, பவித்ரன் 20, ஆகிய 6 பேரும் கர்நாடக மாநிலத்திற்கு தப்பி செல்ல முயன்றபோது சிப்காட் போலிசரால் தமிழக மாநில எல்லையான ஜூஜூவாடி சோதனையில் கைது செய்யப்பட்டனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், அருண் 20, கிருஷ்ண மூர்த்தி 22, ஆகிய 2 பேர் இன்று தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அடைத்தது.