ராமநாதபுரம்: மூன்று முறை முத்தலாக்.. மனைவி கொடுத்த புகாரில் கணவன் மீது பாய்ந்த வழக்கு.!
கடந்த ஒரு சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்த அனிஷ்பாத்திமா பெற்றோருடன் வசித்து வருகிறார்.

By : Thangavelu
மனைவியிடம் முத்தலாக் சொன்ன கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள எஸ்.பி.பட்டினம் கிராமம். அந்த கிராமத்தை சேர்ந்தவர் அனிஷ்பாத்திமா 32, இவருக்கு கடந்த மே மாதம், அதே பகுதியைச் சேர்ந்த செய்யது முகம்மது 35 என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
கடந்த ஒரு சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்த அனிஷ்பாத்திமா பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், திடீரென்று மனைவி வீட்டிற்கு சென்ற செய்யது முகமது, தலாக் தலாக் தலாக் என்று மூன்று முறை குறிப்பிட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் மனைவிக்கு செய்யது முகம்மது கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது பற்றி அனிஷ்பாத்திமா திருவாடனை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து செய்யது முகம்மது மற்றும் அவரது உறவினர்கள் ரகுமத் அலி, ஜகுபர், சேக்காதி அம்மாள் ஆகியோர் மீது, முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முஸ்லிம் சட்டத்தில் உடனடியாக வழக்குப்பதிவு செய்த சம்பவம் அப்பெண்கள் மத்தியில் நல்ல ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது.
