எதிர்க்கட்சிகளின் நாடகம் முறியடிக்கப்படும்.. தமிழகத்தில் பேருந்து, ரயில்கள் நாளை வழக்கம்போல் ஓடும்.!
எதிர்க்கட்சிகளின் நாடகம் முறியடிக்கப்படும்.. தமிழகத்தில் பேருந்து, ரயில்கள் நாளை வழக்கம்போல் ஓடும்.!
By : Kathir Webdesk
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள். ஆனால் புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் 2 மடங்கு அதிகரிக்கும் என்று மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஆனாலும் இதனை ஏற்காத விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் அரசியல் சதி உள்ளது என்று பாஜக வெளிப்படையாக குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், விவசாய சட்டங்களை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு 18 எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக, காங்கிரசார் விவசாயிகளை தவறாக தூண்டிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் இந்த போராட்டத்தை வெற்றி பெற செய்ய எதிர்க்கட்சிகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. ஆனால் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கையும் எடுத்து வருகிறது. தமிழகத்தில் 8 போக்குவரத்து கழகங்கள் சார்பாக 22 ஆயிரம் அரசு பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படுகிறது.
பொது வேலைநிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் அனைத்து அரசு பேருந்துகளும் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதே போன்று ரயில்களும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினர் செய்து வரும் அரசியல் நாடகத்திற்கு மக்கள் ஒருபோதும் ஆதரவு அளிக்க மாட்டார்கள் என்று கூறிவருகின்றனர். ஏற்கெனவே கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது மெல்ல மீண்டு வருகின்றனர். அவர்கள் இனிமேல் போராட்டம், முழுஅடைப்பு எதுக்குமே ஒத்துழைப்பு அளிக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது.