‘உடல் உறுப்பு தானம்’ பெருமையாக உள்ளது.. முதலமைச்சர் நெகிழ்ச்சி.!
‘உடல் உறுப்பு தானம்’ பெருமையாக உள்ளது.. முதலமைச்சர் நெகிழ்ச்சி.!

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக தேர்வாகியுள்ளதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6வது முறையாக தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது. இதற்கான விருதினை மத்திய அரசிடம் இருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று புதுக்கோட்டையில் இருந்தவாறு பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 11வது இந்திய உடல் உறுப்பு தான தினம் விழாவில் உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடமிருந்து விருது பெற்றதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம்.
தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் மட்டுமின்றி, சுகாதார துறையிலும் தலைசிறந்து முன்னோடி மாநிலமாக மற்ற மாநிலங்கள் பின்பற்ற கூடிய வகையிலும் செயல்படுகிறது. மேலும், மருத்துவ சேவையில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 1,392 கொடையாளர்களிடமிருந்து 8,745 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது.
சென்னை தனியார் கல்லூரியில் நடைபெற்ற உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும், புதுக்கோட்டையில் நடைபெற்ற உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த சாதனைகள் கின்னஸ் புத்தகத்திலும், ஆசிய சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. இது போன்ற செயல்பாடுகளால் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக தொடர்ந்து திகழ்ந்து வருகுறது.
இதன் மூலம் உடல் உறுப்பு தானத்தை மக்கள் இயக்கமாகவே தமிழ்நாடு மாற்றி வருகிறது. இந்திய திருநாட்டில் தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து 6வது முறையாக முதன்மை மாநிலம் என்ற விருதினை மத்திய அரசிடம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கும், அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.