'உறுப்பு மாற்று சிகிச்சைக்கு தமிழக அரசு போல் மற்ற மாநிலங்கள் உதவுவதில்லை' - மருத்துவர்கள் புகழாரம்!
'உறுப்பு மாற்று சிகிச்சைக்கு தமிழக அரசு போல் மற்ற மாநிலங்கள் உதவுவதில்லை' - மருத்துவர்கள் புகழாரம்!
By : Bharathi Latha
மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு தமிழக அரசு நிதி உதவியை வழங்கி உயிர்களை காப்பாற்றி வருவதாக PSG மற்றும் MGM மருத்துவமனைகளின் மருத்துவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
கோவை PSG மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், சென்னையில் உள்ள MGM மருத்துவமனையுடன் இணைந்து இருதயம் மற்றும் நுரையீரல் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.
அதன்படி, இரண்டு மருத்துவமனைகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி PSG குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் PSG மற்றும் MGM மருத்துவமனைகளின் மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, PSG மருத்துவமனையின் இயக்குனர் புவனேஸ்வரன், MGM மருத்துவமனையின் இயக்குனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: மூளைச்சாவு அடைந்த ஒருவர் மட்டுமே நுரையீரல் மற்றும் இருதயம் ஆகிய உறுப்புகளை தானமாக கொடுக்க முடியும்.
மூளை சாவு அடையும் நபர்கள் அதிகமாக இருந்த போதிலும், உறுப்புகளை தானமாக கொடுப்பவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மக்களிடையே இதுகுறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை. அனைவரும் கை கோர்த்தால் தான் உயிர்களை காக்க முடியும். உறுப்பு மாற்று சிகிச்சை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செய்ய முடியும். தமிழக அரசு போல் மற்ற மாநிலங்களில் நிதி உதவியை வழங்குவதில்லை.
இந்திய அளவில் தமிழகம் தான் உறுப்பு மாற்று சிகிச்சையில் முக்கியமான முன்னோடியாக உள்ளது. தமிழக அரசு இருதயம் மற்றும் நுரையீரல் தானத்திற்கு உதவுவது பாராட்டப்பட வேண்டியது. மூளை சாவு அடைந்த ஒருவர் உறுப்புதானம் செய்தால் 6 பேர் வரை உயிர் வாழ முடியும். இருதய மற்றும் நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சையில் MGM மருத்துவமனை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னோடியாக உள்ளது. அதனால் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.