ஜல் ஜீவன் திட்டத்தில் ஆட்டையை போட முயன்ற பஞ்சாயத்து தலைவர் - இளைஞர்கள் எடுத்த வீடியோவால் சிக்கினர், திருவண்ணாமலை மாவட்ட தில்லாலங்கடி
திருவண்ணாமலை அருகே ஜல் ஜீவன் திட்டத்தில் நடந்துள்ள மோசடி குறித்து வீடியோ பரவியதால் அவசர அவசரமாக குழாய் பதிக்கும் பணி துவங்கியது.

By : Mohan Raj
திருவண்ணாமலை அருகே ஜல் ஜீவன் திட்டத்தில் நடந்துள்ள மோசடி குறித்து வீடியோ பரவியதால் அவசர அவசரமாக குழாய் பதிக்கும் பணி துவங்கியது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த இந்திராவனம் கிராம பஞ்சாயத்து தலைவராக அ.தி.மு.க'வைச் சேர்ந்த ராஜேஸ்வரி உள்ளார், இவரது மாமனார் ஏழுமலை ஏற்கனவே இருமுறை பஞ்சாயத்து தலைவராக இருந்தவர். தற்பொழுது அ.தி.மு.க வடக்கு மாவட்ட ஒன்றிய துணைச் செயலாளராக உள்ள இவரே 'ஆக்டிங்' பஞ்சாயத்து தலைவராக செயல்படுகிறார்.
இந்த கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன, ஜல்ஜீவன் திட்டத்தில் நடப்பு நிதியாண்டில் இரண்டாம் கட்டமாக தலா 52 வீடுகளுக்கு 3.69 லட்சம் ரூபாய் செலவில் வீடு தரும் குடிநீர் இணைப்பு வழங்க ஒரு மாதத்திற்கு முன்பு பாரதி என்பவருக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது. பணியை அன்பு என்பவர் சப் காண்ட்ராக்ட் ஆக எடுத்து செய்து வருகிறார்.
இந்த திட்டத்தில் குடிநீர் தொட்டியில் இருந்து வீடுகளுக்கு புதிய குழாய் அமைத்து வீடு தூரம் சிமெண்ட் பில்லர் அமைத்து அதில் குழாய் இணைப்பை பொருத்தி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் பஞ்சாயத்தில் இந்த பணிகளை செய்யாமல் பெரும் மோசடி நடந்துள்ளது, குடிநீர் குழாய்கள் செட்டப் செய்யப்பட்டு வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்கியதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
குடிநீர் இணைப்பு பெறாதவர்கள் வீட்டில் செட்டப் பில்லர் வைத்து இரண்டு அடி குழாயை அரை அடி அளவு வரை தோண்டி புதைத்து குழாய் இணைப்பு வழங்கியது போல புகைப்படம் எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்பிய பணம் பெற முயற்சித்துள்ளனர். இந்த மோசடியை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் வீடியோ எடுத்து வெளியிட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் திட்டத்தை அமல்படுத்தியதாக முறைகேடுகள் நடப்பதாக மேலும் பல புகார்கள் எழுந்தன. இதனையடுத்து சேத்துப்பட்டு பி.டி.ஓ வேணுகோபால் கூறுகையில், ஜல்ஜீவன் மிஷன் திட்டக் குடிநீர் குழாய் இணைப்பு பணிக்கு டெண்டர் விடப்பட்ட 90 நாட்களில் பணி முடிக்க வேண்டும். பணிகள் மோசடி நடத்ததாக கூறப்படுகிறது, இப்பணிகள் முடிக்கப்பட்டதாக பஞ்சாயத்து நிர்வாகம் எங்களிடம் கூறவில்லை. அதற்கான பணத்தை வழங்கவில்லை என்றால் மேலும் இதற்காக தற்போது குழாய் பதிக்கும் பணிகள் விறுவிறுவென நடந்து வருகின்றன' என்றார்.
