சென்னை மக்களே.. மாஸ்க் போடுங்கள்.. இல்லையெனில் ஐ.சி.யு.தான்.. இந்திய விஞ்ஞானி.!
சென்னை மக்களே.. மாஸ்க் போடுங்கள்.. இல்லையெனில் ஐ.சி.யு.தான்.. இந்திய விஞ்ஞானி.!
By : Kathir Webdesk
சென்னை மக்கள் கொரோனாவை மறந்து விட்டது போன்று தெரிவதாக இந்திய மருத்துவ ஆய்வு கழகத்தின் விஞ்ஞானியும், பொது சுகாதார நிபுணருமான பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படுகின்ற உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதே போன்று தமிழகத்தை கொரோனா தாக்கம் குறைந்து கொண்டே வருகிறது. இதனிடையே, பிரிட்டனில் உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது உலக மக்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பிரிட்டனில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்காக அவர் கிண்டியிலுள்ள கிங் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தாக்கியுள்ள கொரோனா மரபியல் மாற்றமடைந்த வைரஸால் ஏற்பட்டதா என்பது பற்றிய ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை மக்கள் கொரோனாவை மறந்து விட்டது போன்று தெரிவதாக இந்திய மருத்துவ ஆய்வு கழகத்தின் விஞ்ஞானியும், பொது சுகாதார நிபுணருமான பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: சென்னை வாழ் மக்கள் பெருந்தொற்று நோயான கொரோனாவை முற்றிலுமாக மறந்துவிட்டதாகவே தெரிகிறது. குறிப்பாக கூட்ட நெரிசல் அதிகமுள்ள மால்கள் போன்ற இடங்களில் மக்கள் மாஸ்க் என்ற ஒன்றை மறந்து விட்டனர். 2021ம் ஆண்டை நல்ல ஆரோக்கியத்துடன் குடும்பத்துடன் தொடங்க கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றுங்கள். இல்லையெனில் ஐசியுதான் என கூறியுள்ளார்.
இவரது கருத்தை சென்னை மக்கள் மதித்து அனைவரும் மாஸ்க் போட்டுசெல்வது நல்லது.