அறநிலையத்துறை எதற்கு இருக்கு? ரூ.1.21 கோடி வருமானம் வந்தும், ராமேஸ்வரத்தில் பராமரிப்பில்லாத சிவலிங்க சிலைகள் -
ராமேஸ்வரத்தில் பராமரிப்பில்லாத சிவலிங்கம் சிலைகள்
By : Muruganandham
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பராமரிப்பின்றி கிடக்கும் சிவலிங்கம் சிலைகளை பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவதீர்த்த தலமான ராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை பக்தர்கள் நீராட செல்லும் வழியில்,சிவனை நினைவு கூர்ந்து தரிசிக்கும் விதமாக 2ம் பிரகாரம் தெற்கு பகுதியில் 108 சிவலிங்க சிலைகள் பிரதிஷ்டை செய்துள்ளனர். இச்சிலைக்கு கோயில் நிர்வாகம் எண்ணெய் காப்பு பூசி, மலர்கள் வைத்து பூஜித்தது.
கொரோனா ஊரடங்கினால் கடந்த 18 மாதமாக சிலைகளுக்கு எண்ணெய் காப்பு பூசி, மலர்கள் வைத்து பூஜிப்பதை கோயில் நிர்வாகம் கைவிட்டது. இதனால் சிவலிங்க சிலைகள் பராமரிப்பு இன்றி துாசி படிந்து கிடப்பதை கண்டு, பக்தர்கள் வேதனையுடன் செல்கின்றனர்.
கொரோனா ஊரடங்கின் போது கோவில்களில் வழக்கமான திருவிழாக்களும் சடங்குகளும் தொடர்ந்து நடைபெறுவதாக அறநிலையத் துறை உறுதி அளித்திருந்தது. ஆனால் ராமேஸ்வரம் போன்ற பிரசித்தி பெற்ற, உண்டியல் வரவு அதிகம் உள்ள கோவிலுக்கே இந்த நிலை என்றால், கிராமப்புற, சிறிய கோவில்களை அறநிலையத் துறை எந்த லட்சணத்தில் பராமரிக்கும் என்ற விமரிசனம் எழுந்துள்ளது. மேலும் அறநிலையத் துறை உறுதி அளித்தபடி கோவில்கள் சடங்கு சம்பிரதாயங்கள் முறைப்படி நடந்தனவா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவில் வருமானம் எங்கே போகிறது?
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் ரூ.1.21 கோடி காணிக்கையாக கிடைத்தது. கோயிலில் 2 மாதம் பின் நேற்று சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகள் சன்னதிகள் முன்புள்ள உண்டியல்கள் கோயில் இணை ஆணையர் பழனிகுமார் முன்னிலையில் திறக்கப்பட்டது. பின் காணிக்கைகள் சேகரித்து கோயில் கல்யாண மண்டபத்தில் கோயில் மேலாளர் சீனிவாசன், பேஸ்கார்கள் கமலநாதன், அண்ணாதுரை, முனியசாமி, கோயில் ஊழியர்கள் பலர் எண்ணினர். இதில் ரொக்கப்பணம் 1 கோடி, 21 லட்சத்து, 99 ஆயிரத்து, 253 ரூபாயும், தங்கம் 94 கிராம், வெள்ளி 1 கிலோ 900 கிராம் காணிக்கையாக கிடைத்தது. இத்தனை வருமானம் வந்த போதிலும் கோவில் பராமரிப்பில் அறநிலையத்துறை ஆர்வம் காட்டாமல் இருப்பது, பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.