கோர்ட் சொன்ன பிறகும், தொழிலாளர்கள் வயிற்றில் அடிப்பது ஏன்? கொந்தளிக்கும் சீமான்!

By : Kathir Webdesk
நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்குகளில் பல ஆண்டுகளாக தினக்கூலிகளாகப் பணிபுரியும் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அவர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்குகளில் தினக்கூலிகளாகப் பணிபுரியும் தொழிலாளர்கள், தங்களை நிரந்தரப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டுமென்ற வாழ்வாதார உரிமைக்காக கடந்த பல ஆண்டுகளாகப் போராடிவரும் நிலையில், அவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழ்நாடு அரசு இதுவரை கண்டு கொள்ளாது, காலம் கடத்தி வருவது ஏமாற்றமளிக்கிறது. .
பணி நிரந்தரம் வேண்டி பல்வேறு சட்டப்போராட்டங்களை முன்னெடுத்து நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றபோதும், இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படாமல் அத்தொழிலாளர்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரியது.
ஆகவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்குகளில் பத்தாண்டிற்கும் மேலாகத் தினக்கூலிகளாகப் பணிபுரியும் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட முன்வரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
