கோவையில் பெண்ணை தாக்கி இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்த சிறப்பு எஸ்.ஐ., கைது.!
கோவையில் பெண்ணை தாக்கி, அவரது தந்தையின் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்ததற்காக சிறப்பு எஸ்.ஐ. கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By : Thangavelu
கோவையில் பெண்ணை தாக்கி, அவரது தந்தையின் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்ததற்காக சிறப்பு எஸ்.ஐ. கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நகரில் உள்ள பந்தய சாலை காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணியாற்றி வருபவர் பார்த்திபன் 57, இவர் சிங்காநல்லூரில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகின்றார்.
இந்நிலையில், சிறப்பு எஸ்.ஐ., பார்த்திபனுக்கும் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் அவரது உறவு பெண்ணான அபிநயா என்பவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு, பின்னாளில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அபிநயாவுக்கு பார்த்திபன் ரூ.2 லட்சம் வரை பணம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே பணத்தை திருப்பி கொடுக்குமாறு பார்த்திபன் அபிநயா குடும்பத்தாருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அதே போன்று நேற்று முன்தினம் பணத்தை திருப்பி கேட்டபோது பார்த்திபனுக்கும், அபிநயாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பார்த்திபன், அபிநயாவை தாக்கியது மட்டுமின்றி அவரது தந்தையின் இருசக்கர வாகனத்தையும் தீ வைத்துள்ளார். இதில் வாகனம் முழுவதும் எரிந்துள்ளது.
இது பற்றி அபிநயா சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறப்பு எஸ்.ஐ. பார்த்திபனை கைது செய்தனர். கள்ளக்காதலால் சிறப்பு எஸ்.ஐ. ஒருவர் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்த சம்பவம் பொதுமக்கள் மட்டுமின்றி காவலர்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.
