RTI மூலம் கேள்வி எழுப்பிய தன்னார்வலரை மிரட்டிய போலீசாருக்கு அபராதம் - மனித உரிமைகள் ஆணையம் அதிரடி
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலருக்கு போலீசார் மிரட்டல் விடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By : Mohan Raj
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலருக்கு போலீசார் மிரட்டல் விடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் திருமலையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் சமூக ஆர்வலர், இவர் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டே தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பல்வேறு ஊழல்களை வெளிக் கொண்டு வந்தார். இவர் 2019ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பாக திருமலையம்பாளையம் பேரூராட்சிகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சில தகவல்களை கேட்டிருந்தார்.
அப்போது பேரூராட்சியில் இருந்த மணிகண்டன் என்ற ஊழியர் ரமேஷ் குமாரை மிரட்டியுள்ளார் இதுகுறித்து ரமேஷ் அப்போதே மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி ஆகியோரிடம் புகார் தெரிவித்திருந்தார்.
இதனிடையே அப்போது மதுக்கரை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த தூயமணி வெள்ளைச்சாமி, மணிவண்ணன், எஸ்.ஐ.ஆனந்தகுமார் ஆகிய மூன்று காவல்துறையை சேர்ந்தவர்களும் ஒருநாள் இரவு ரமேஷ் வீட்டுக்கு சென்று தூங்கிக் கொண்டிருந்த அவரை எழுப்பி மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அடுத்தநாள் டி.எஸ்.பி'யை சந்திக்க வருமாறு போலீசார் ரமேஷ் குமாரிடம் கூறினர், அதன் அடிப்படையில் ரமேஷ் அங்கு சென்றுள்ளார் ஆனால் டி.எஸ்.பி இல்லை இதனையடுத்து தனக்கு நடந்த மனித உரிமை மீறல் விவகாரம் தொடர்பாக ரமேஷ் மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார்.
இது விசாரித்த மனித உரிமைகள் ஆணையம் பாதிக்கப்பட்ட ரமேஷுக்கு சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் ரூ.1 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. இதை தூயமணி வெள்ளைச்சாமி 25,000, மணிவண்ணன் 25,000, ஆனந்தகுமார் 50,000 இணைந்து கொடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது இந்த உத்தரவு சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.