திருடன் என்று நினைத்து சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்.. திருச்சியில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்.!
திருடன் என்று நினைத்து சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்.. திருச்சியில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்.!
By : Kathir Webdesk
திருச்சி மாவட்டத்தில் திருடன் என்று நினைத்து பொதுமக்கள் தாக்கியதில் கேரள இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், அவூர் கிராமத்தில் அண்மைக் காலமாக தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்ததாக சொல்லப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் புதுக்கோட்டை- திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள அவூர் கிராமத்தில், விவசாயி பழனிச்சாமி வீட்டில் நுழைந்து 35 சவரன் நகை மற்றும் 4.75 ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இந்த தொடர் திருட்டுச் சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. அதன் காரணமாக அல்லூர் கிராமத்தில் திருட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்காக கிராம மக்கள் ஒர குழு ஒன்றை அமைத்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று அப்பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன் என்பவரது வீட்டின் கதவை யாரோ மர்ம நபர்கள் தட்டியதாகவும், சத்தம் கேட்டு கதவை திறந்து பார்த்தபோது அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவர்களை திருடர்கள் எனக் கருதிய மக்கள் அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர், அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்ட நிலையில், மற்றொரு நபர் அங்கு கிடந்த மரக்கட்டையால், பொதுமக்களையும், அங்கிருந்த இருசக்கர வாகனங்களையும் தாக்கியதோடு கத்தியை காட்டியும் மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சாம்பசிவம், ராதா ஆகியோர் படுகாயம் அடைந்த நிலையில், 7 இரு சக்கர வாகனங்களும் சேதமடைந்தன. இதனையடுத்து பதில் தாக்குதல் நடத்திய பொதுமக்கள் ஒரு வழியாக அவரை மடக்கிப்பிடித்து பொதுமக்கள் நடத்திய தாக்குதலில் அவரும் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து படுகாயமடைந்த நபரை கயிற்றால் கட்டி சரக்கு வாகனத்தில் ஏற்றிய பொதுமக்கள் அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே, தப்பி ஓடிய மற்றொரு நபரையும் வளைத்து பிடித்த மக்கள் அவரை ஜீயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து சம்பவம் பற்றி கூறியுள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திபு என்னும் நபர் சிகிச்சைப் பலன்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் வீட்டுக்கதவை தட்டிய நபர்கள் கேரள மாநிலம் கிருஷ்ண கிருபா பகுதியைச் சேர்ந்த அரவிந்த் 24, திபு 25, என்று தெரிய வந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஜீயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.