'அடிச்சு வச்ச பணத்துக்கு ரைடு வரக்கூடாதுன்னு பொண்டாட்டிய கோவிலுக்கு அனுப்புறாங்க' - கோவிலை காப்பாற்றுங்கள் - சீரும் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல்
கோவில்களில் நடக்கும் திருட்டை அரசு மூடி மறைக்கிறது எனவும் கோவில்களின் தெய்வத்திருமேனிகள் பாதுகாப்பாக இல்லை
By : Mohan Raj
கோவில்களில் நடக்கும் திருட்டை அரசு மூடி மறைக்கிறது எனவும் கோவில்களின் தெய்வத்திருமேனிகள் பாதுகாப்பாக இல்லை எனவும் ஓய்வுபெற்ற ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் பரபரப்பாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்து சமய கோவில்களின் சுவாமி விக்கிரகங்கள் களவு போவது, கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு, கோவிலை பராமரிக்காமல் விட்டு அழிப்பது போன்ற வேலைகள் தமிழகத்தில் அதிகம் நடைபெறுகின்றன.
ராமநாதபுரத்தில் உலக சிவனடியார்கள் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிவனடியார்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிகள் முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, 'தமிழகத்தின் பல்வேறு கோயில்களுக்கு சென்று வந்துள்ளோம் குறிப்பாக நாகை, திருவாரூர் உட்பட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களின் தெய்வ திருமேனிகள் பாதுகாப்பாக இல்லை.
கடந்த 2017 ஜூலை 21-ல் உயர்நீதிமன்றம் கோவில்களில் 'ஐடியல் ஸ்ட்ராங் ரூம்' கட்ட உத்தரவிட்டது, 340 கோடியில் 26 ஆயிரம் கோவில்களில் கடந்த ஆட்சியில் வெறும் பேப்பரில் மட்டுமே காண்பிக்கப்பட்டது 'ஐடியல் ஸ்ட்ராங் ரூம்'. கிட்டத்தட்ட 2000 நாட்களை கடந்து நீதிமன்ற உத்தரவு அப்படியே இருக்கிறது, தற்போதைய ஆட்சியில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை கோவிலில் நடக்கும் திருட்டுகளை அரசு மூடி மறைக்கிறது. எனக்கு எந்த அரசியல் ஆசைகளும் இல்லை. அடுத்த தலைமுறைக்கு இந்த கோவில்களின் வரலாற்று சிற்பங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவே போராடிக் கொண்டிருக்கிறேன், அதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனக்கு பயம் கிடையாது, என்னை கைது செய்யப் போவதாக பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர்.
கோவில்களின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருக்கும் டி.பி.எஃப் நம்பர் ஆலய பாதுகாப்பு பணியில் ஓய்வு பெற்றவர்களை நியமிப்பதால் எந்த பயனும் இல்லை, இதுவரை அவர்கள் எந்த கோவில் கொள்ளையையும் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் இல்லை. தூங்கி எழுந்து செல்ல அவர்களுக்கு 5000 ரூபாய் கொடுத்து கோவில் நிதியை வீணடிக்கின்றனர். எனவே முப்பது வயதிற்குள் உள்ள ஊர்க்காவல் படை ஒன்றை நியமித்து அவர்களை அரை மணி நேரத்துக்கு ஒரு முறை பயோமெட்ரிக் பதிவு முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வைத்து கோவில் சிலைகள் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
அமைச்சர்களின் மனைவிமார்கள் கோவில் கோவிலாக சென்று வழிபாடு நடத்துகிறார்கள், தாங்கள் அடித்த பணத்திற்கு சி.பி.ஐ, விஜிலென்ஸ் வந்துவிடக்கூடாது என சாமியை வணங்குகிறார்கள், அமைச்சர்களின் மனைவிமார்கள் கோவிலுக்கு வந்த ஐநூறு ரூபாய் பணத்தை கொடுக்கிறார்கள், உங்களை காப்பாற்றிக்கொள்ள கோவிலுக்கு வருகிறீர்களே அந்த கோவில் சிலைகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க கூடாதா?
மூலவருக்கு பிரதிநிதி போன்றவர் தான் உற்சவர் திருவிழா நாட்களில் மட்டுமே உற்சவரை வெளியில் எடுத்து வருவதும், உற்சவரை கேட்டு பெறுவதும் முறையானது அல்ல! மூலவரை தரிசிக்க வரும் பக்தர்கள் உற்சவரையும் தரிசித்து செல்ல வழிவகை செய்ய வேண்டும். ஆனால் கடந்த அரசு தற்போதைய அரசும், கோவில் சிலைகளை காட்சி பொருளாக வைத்து அட்டூழியம் செய்து வருகின்றனர்' என கூறினார்.
திராவிடம் என்ற பெயரில் இந்து மத கோவில்கள் அழிக்கப்படுவது தெளிவாக தெரிகிறது.