சென்னை ஐஐடியில் கொரோனா அதிகரிக்க இதுதான் காரணமாம்.. பிற கல்லூரி மாணவர்களுக்கும் இதுதான் கதி.!
சென்னை ஐஐடியில் கொரோனா அதிகரிக்க இதுதான் காரணமாம்.. பிற கல்லூரி மாணவர்களுக்கும் இதுதான் கதி.!
By : Kathir Webdesk
சென்னையில் உள்ள ஐஐடியில் மாணவர்களுக்கு கடந்த 2 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இது எப்படி நடந்தது என்று மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.
அதாவது கொரானா வைரஸ் எவ்வாறு வேகமாக பரவியது என்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சென்னை ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் நேற்று ஒரே நாளில் 32 மாணவர்களுக்கும், இன்று ஒரே நாளில் 33 மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்ட நிலையில், ஐஐடி மெட்ராஸ் இது போன்ற ஒரு நிலையை சந்திக்க வேண்டியது. பிற கல்லூரிகளுக்கு ஒரு பாடம் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளிப்படையாக கூறியிருந்தார். சென்னை ஐஐடி மாதிரியே, பிற கல்லூரிகளிலும் கொரோனா பரவ வாய்ப்பு-ள்ளதால் சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார். ஐஐடியில் மாணவர்கள், பணியாளர்கள் உட்பட 104 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு எங்கிருந்து பாதிப்பு துவங்கியது என்பது பற்றி உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் எளிதாக மற்றவர்களுக்கு பரவியது எப்படி என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி ஆய்வு மாணவர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்: ஊரடங்கு காரணமாக குறைந்த அளவு மாணவர்கள் இருக்கும் போது இங்கு ஒரு மெஸ் இயங்கி வந்தது போதுமானதாக இருந்தது. தற்போது மாணவர்கள் அதிக அளவு வந்த பின்னரும் இங்கு ஒரு மெஸ் மட்டுமே இயங்கி வருகிறது. அதில் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும்.
முகக் கவசத்தை சாப்பிடும் இடத்தில் யாரும் பயன்படுத்த முடியாது என்பதால் கூட்டம் மற்றும் முக கவசம் இல்லாமை ஆகிய இரண்டு பிரச்சினைகளும் சேர்ந்து எளிதாக அதிகம் பேருக்கு கொரோனா பாதிப்பு பரவியுள்ளது தெரியவந்துள்ளது. மூடப்பட்ட மெஸ் ஒரே ஒரு மெஸ் இருப்பதுதான் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் என்ற தகவலை தொடர்ந்து அந்த மெஸ் தற்போது மூடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தனித்தனியாக அவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு உணவு, அனுப்பி வைக்கப்படுவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை ஐஐடி மாணவர்களுக்கு மட்டும் இந்த எச்சரிக்கை கிடையாது. பிற கல்லூரி நிர்வாகங்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. மாணவர்கள் எங்கு அதிகம் கூடுவார்களே அங்கு கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. பெரும்பாலான கல்லூரிகளில் ஒரே ஒரு மெஸ் மட்டுமே செயல்படுகிறது. இதனால் மற்ற கல்லூரி மாணவர்களுக்கும் கொரோனா பரவும் சூழல் உள்ளது.
எனவே சாப்பாட்டில் மாணவர்கள் உஷாராக செயல்படுவது நல்லது. முடிந்த அளவிற்கு மாணவர்கள் சாப்பிடுவதற்கு வீட்டில் இருந்து உணவை எடுத்து வருவது சிறந்தது. அல்லது தனித்தனியே விடுதிகளுக்கு ஆர்டர் செய்து சாப்பிட்டு வந்தால், தற்காலிகமாக இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க வழியாக அமையும் என்பது சுகாதாரத்துறை நிபுணர்களின் கருத்தாகும். இதனை மாணவர்கள் கடைப்பிடித்து வந்தால் கொரோனா வைரஸ் தொற்று எளிதில் பரவுவது தடுக்கப்படும்.