நகராட்சி கட்டடத்தில் "உதயநிதி" படப்பிடிப்புக்காக மருத்துவமனை செட்டப் : அம்பேத்கரையும், பெரியாரையும் அருகருகே கொண்டு வந்து பரபரப்பு!
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படப்பிடிப்பில் சலசலப்பு
By : Muruganandham
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்திற்காக நகராட்சி கட்டிடம், அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த சில நாட்களாக உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இதில் உதயநிதி ஸ்டாலின் டிஎஸ்பி ரோலில் நடிக்கிறார். இதற்காக உடுமலை நகரிலுள்ள பழைய நகராட்சி கட்டிடம் படப்பிடிப்பு நடத்த வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி அலுவலகம் படக்கட்சிகளுக்காக அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி, மக்கள் போராட்டம் நடத்துவதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதற்காக நகராட்சி அலுவலகத்திற்கு முன்புறம் சாலையோரத்தில் படப்பிடிப்பிற்காக தற்காலிகமாக அம்பேத்கர் சிலையும் அருகிலேயே பெரியார் சிலையும் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பெரியார் சிலையும் அம்பேத்கர் சிலையும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாக கூறி மக்கள் முழக்கங்களை எழுப்பினர். தகவல் கிடைத்ததும் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து போலீசார் அங்கு வந்து அம்பேத்கர் சிலை பெரியார் சிலையும் உரிய அனுமதி பெற்றுத்தான் வைக்கப்பட்டுள்ளது என்றும் இரண்டு நாள்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன் அந்த சிலைகள் அகற்றப்படும் என்றும் கூறியதால், கூடியிருந்த மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.