ஜும்மாவில் பேசியதால் தான் திமுக வெற்றி பெற்றது - திமுகவை தொடர்ந்து சீண்டும் சிறுபான்மையினர்!

Update: 2021-07-29 07:03 GMT

ஜமாத்தில் இமாம்கள் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் காரணமாகவே 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது என்று இஸ்லாமிய பொதுக்கூட்டத்தில் மதபோதகர் ஒருவர் பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திமுக வெற்றி பெற்றது நாங்கள் போட்ட பிச்சை என்று அண்மையில் ஜார்ஜ் பொன்னையா என்ற கத்தோலிக்க பாதிரியார் பேசி சர்ச்சையானதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் போது இஸ்லாமியர் ஒருவரும் தாங்கள் கேட்டுக் கொண்டதன் காரணமாகவே இஸ்லாமியர்கள் அனைவரும் திமுகவிற்கு வாக்களித்தனர் என்றும் அதனால் தான் திராவிட முன்னேற்றக் கழகம் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது என்றும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அவர் அந்த வீடியோவில் "இஸ்லாமியர்கள் பொது மேடையில் பேசுவதை கவனிப்பார்கள் ஆனால் செயல்படுத்த மாட்டார்கள். ஆனால் வெள்ளிக்கிழமை பள்ளிவாசலில் ஜும்மா மேடையில் சொல்லப்பட்டால் கண்டிப்பாக செயல்படுத்தப்படும். இதற்கு உதாரணம் என்னவென்றால் பல மாநிலங்களில் ஜும்மாவில் இமாம்கள் பேசவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஜும்மாவில் இமாம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்று பேசினார்கள்.

இதனால் நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலில் ஒரு தீர்ப்பு வந்த பொழுது தமிழகத்தில் மட்டும் வேறு தீர்ப்பு வந்தது. ஜும்மாவின் இமாம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் யாரை புறக்கணிக்க வேண்டும் என்றும் பேசியதன் விளைவாகவே இவ்வாறு ஒரு தீர்ப்பு கிடைத்தது என்று ஆவேசமாக பேசினார். இதன் மூலம் தற்போது இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் பொது வழிபாட்டின்போது அரசியல் பேசி யாருக்கு வாக்களிக்க வேண்டும் யாருக்கு வாக்களிக்க கூடாது என்று முடிவெடுக்கிறார்கள் என்று தெரியவருகிறது.

ஏற்கனவே கிறிஸ்தவர்கள் திமுக வெற்றி பெற்றது தாங்கள் போட்ட பிச்சை என்று தெரிவித்திருக்கும் நிலையில் தற்போது இஸ்லாமியர் ஒருவரும் ஜும்மாவில் இமாம் பேசியதன் காரணமாகவே திமுக வெற்றி பெற்றது என்று தெரிவித்துள்ளது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Similar News