தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 2 லட்சம் கோடியில் புதிய சாலைகள்!

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 2 லட்சம் கோடியில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறினார்.

Update: 2024-09-17 15:26 GMT

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை தேசிய நெடுஞ்சாலை பணிகள் தற்போது முடியும்  தருவாயில் உள்ளது. இந்தப் பணிகளை மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை மந்திரி நிதின் கட்காரி கும்பகோணத்தில் ஆய்வு செய்தார். கும்பகோணம் புறவழிச்சாலையில் சாலை வரைபடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை - விக்ரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் ரூபாய் 4,730 கோடியில் 164 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் சோழபுரம் சேத்தியாத்தோப்பு வரையிலான சாலை பணிகள் 95 சதவீத நிறைவு பெற்றுள்ளது சாலை அமைப்பதற்கான கட்டுமான மூலப்பொருள்கள் கிடைப்பதில் சில சிக்கல் இருந்தது. பல தடைகளை தாண்டி சாலை மிகவும் தரமாக அமைந்துள்ளதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்த சாலை பணி கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் நான்காம் தேதிக்குள் முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் விக்கிரவாண்டி சேத்தியாத்தோப்பு வரை சாலை அமைப்பதில் ஒப்பந்தக்காரர் தாமதப்படுத்தியதால் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் அதை சாலை பணிக்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது விரைவில் அந்தப் பணி தொடங்கும்.

ஆந்திர - தமிழக எல்லையில்  ரூபாய் 15,000 கோடியில் ராணிப்பேட்டை சென்னை சாலையை விரிவாக்கம் செய்வதன் மூலம் சென்னை பெங்களூர் ஆந்திரா இடையிலான கனரக வாகன போக்குவரத்து நெரிசல் குறையும். தற்போது தேசிய நெடுஞ்சாலை மூலம் 10 புதிய சாலைகள் அமைக்க திட்டம் 727 கிலோமீட்டர் தூரத்துக்கு 20 ஆயிரம் கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் அரியலூர் பெரம்பலூர் இடையே உள்ள 2 வழி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதால் சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு பயனுள்ளதாக அமையும். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான தனிச்சாலை அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரூபாய் ஒரு லட்சம் கோடியில் 2,781 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதியதாக 71 சாலைகள் அமைக்கும் திட்டம் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது .தமிழகத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை 451 பல்வேறு புதிய சாலை திட்டங்கள் 9300 கிலோமீட்டர் தூரத்துக்கு 2 லட்சம் கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கு முன்பாக 4,975 தேசிய நெடுஞ்சாலைகள் இருந்தன .2014 ஆம் ஆண்டுக்கு பிறகு தேசிய நெடுஞ்சாலைகள் 6086 சாலையாக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ரூபாய் 5 லட்சம் கோடியில் 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு 27 புதிய பசுமைவழிச் சாலை அமைய உள்ளது. தமிழகத்தில் மூன்று பசுமை வழிச்சாலை 187 கிலோமீட்டர் தூரத்தில் 10,100 கோடி செலவில் அமைய உள்ளது. தமிழகத்துக்கு மேலும் ஒரு லட்சம் கோடி செலவு செய்ய தயாராக உள்ளோம். தமிழக அரசு நிலம் கையகப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் .இந்தியாவிலேயே தேசிய நெடுஞ்சாலைப் பணியில் தமிழகம் நம்பர் ஒன்னாக உள்ளது. மேலும் தமிழகத்தின் பங்களிப்பு நல்லபடியாக உள்ளது. இவ்வாறு மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறினார்.

Tags:    

Similar News