போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: 9.72 கிலோ மெத்தம்பேட்டமைன் மாத்திரைகள் பறிமுதல்!

Update: 2025-06-01 17:44 GMT

போதைப்பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மே 30 அன்று ஐஸ்வால்-சாம்பாய் நெடுஞ்சாலையில் (என்ஹெச்-6) மிசோரமின் செலிங்கில் ஒரு காரில் இருந்து 9.72 கிலோ மெத்தம்பேட்டமைன் மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் மதிப்பு ₹ 9.72 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

வருவாய் புலனாய்வு அதிகாரிகள், சந்தேகத்துக்கு இடமான அந்தக் காரை சோதனையிட்ட போது பின் இருக்கைக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த, போதைப்பொருள்கள் அடங்கிய 10 பாக்கெட்டுகளைக் கண்டுபிடித்தனர். மீட்கப்பட்ட கடத்தல் போதைப்பொருளும் அந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக ஒருவர் போதைப்பொருள்கள் தடுப்புச் சட்டம்-1985-ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், மியான்மரில் இருந்து இந்த போதைப் பொருள் மிசோரமிற்கு கடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. ஜனவரி 2025 முதல், வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் மிசோரமில் ₹ 72 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மெத்தம்பேட்டமைன், ஹெராயின் ஆகிய போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்து ஏழு பேரைக் கைது செய்துள்ளது.

Similar News