ஊரடங்கால் வெளியே செல்லக்கூடாது என கண்டித்ததால் தூக்கிட்டுக்கொண்ட பள்ளி மாணவன் - அதிர்ச்சியில் புதுச்சேரி!

ஊரடங்கால் வெளியே செல்லக்கூடாது என கண்டித்ததால் தூக்கிட்டுக்கொண்ட பள்ளி மாணவன் - அதிர்ச்சியில் புதுச்சேரி!

Update: 2020-04-06 14:48 GMT

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு மீறி வீட்டைவிட்டு, வெளியே செல்லக்கூடாது என தாய் கண்டித்ததால், பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அருகே நல்லவாடு நடுத்தெருவை சேர்ந்தவர் முருகன் (47) மீனவர். இவரது மகன் குணசெல்வன். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோதும் குணசெல்வன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தொடர்ந்து ஊர்சுற்றி வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். ஆனால் அதை அவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பிறகு நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு வந்துள்ளார். இதனை கண்ட அவரது தாய் வெளியில் கொரோனா நோய் பரவுவதால் குளிக்காமல் வீட்டிற்குள் வரக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார். ஆனால் குணசெல்வன் தனக்கு எதுவும் வராது என வாதம் செய்துள்ளார். அதற்கு அவரது தாயார் உனக்கு வந்தால் பரவாயில்லை. உன்னால் மற்றவர்களுக்கு வரக்கூடாது என கண்டிப்புடன் கூறியுள்ளார்.


இதனையடுத்து அவர் குளித்துவிட்டு, தனது அறைக்குள் உடை மாற்ற சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அறையை விட்டு வெளியில் வராததால், சந்தேகமடைந்த முருகன், அறைக்கு சென்று பார்த்த போது குணசெல்வன் தூக்கு போட்டு தொங்கிக்கொண்டிருந்தார், உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவரை தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து குணசெல்வனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஊரடங்கை மீறி வெளியே செல்ல வேண்டாமென, தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News