"சரியான நேரத்தில் முடிவு எடுத்ததால் தான் கரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது" - பிரதமர் மோடி

"சரியான நேரத்தில் முடிவு எடுத்ததால் தான் கரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது" - பிரதமர் மோடி

Update: 2020-06-17 02:11 GMT

சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்ததால் தான் இந்தியாவில் கரோனாவை இந்த அளவுக்கு கட்டுப்படுத்த முடிந்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

21 மாநில முதல்வர்களுடன் காணொளிக்காட்சி மூலமாக கலந்துரையாடிய பிரதமர் மோடி மத்திய அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொருளாதார மீட்பு திட்டங்கள், ஊரடங்கு தளர்வு நிலவரங்கள் உள்ளிட்டவை குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், "முதற்கட்ட ஊரடங்கு தளர்வு தொடங்கி இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன, இந்த நேரத்தில் நமக்கு ஏற்பட்ட அனுபவம் எதிர்காலத்தில் நமக்கு பயனளிக்கும். இன்று நான் உங்களிடமிருந்து கள யதார்த்தத்தை அறிந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் பரிந்துரைகள் எதிர்கால திட்டமிடலும் உதவியாக இருக்கும்.

கடந்த சில வாரங்களில், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பினர், மற்றும் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களை அடைந்தனர். ஏறக்குறைய அனைத்து போக்குவரத்து முறைகளும் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளன. இருப்பினும் கரோனா வைரஸின் தாக்கம் உலகின் பிற பகுதிகளைப் போல இந்தியாவில் பெரிதாக இல்லை. இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 50% ஐ விட அதிகமாக உள்ளது. நம்மைப் பொறுத்தவரை ஒரு இந்தியரின் மரணம் என்றாலும், அது ஏற்றுக்கொள்ள முடியாததே. ஆனால் கரோனாவால் குறைந்த பட்ச இறப்புகள் நிகழ்ந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது உண்மை.

பொது இடங்கள் திறக்கப்பட்டு இயல்புநிலை திரும்புவதால், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கை கழுவுதல் மற்றும் சானிடிசர்களின் பயன்பாடு ஆகியவற்றை மக்கள் தீவிரமாக பின்பற்ற வேண்டும். சரியான நேரத்தில் நாம் எடுத்த முடிவுகளால் தான் இந்தியாவில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடிந்தது. வர்த்தகம் மீண்டும் வேகமடைய நாம் இணைந்து போராட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Similar News