சீன பொருட்களுக்கு மாற்றாக நட்பு நாடுகளிலிருந்து இறக்குமதி - பட்டியல் தயாரிக்கும் மத்திய அரசின் அதிரடி முயற்சி.!
சீன பொருட்களுக்கு மாற்றாக நட்பு நாடுகளிலிருந்து இறக்குமதி - பட்டியல் தயாரிக்கும் மத்திய அரசின் அதிரடி முயற்சி.!
லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி அமைத்த கூடாரங்களை இந்திய வீரர்கள் நீக்கியபோது ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த நிலையில் சீனாவுக்கு எதிரான மனநிலை இந்தியர்களிடையே அதிகரித்து வருகிறது. அரசும் சீனாவுடனான தொடர்புகளைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முக்கியமான, தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட இயலாத பொருட்களை வேறு எந்த நாடுகளிலிருந்து தருவிக்க முடியும் என்று மத்திய அரசு ஆய்வு செய்து கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய வர்த்தகத் துறையின் கீழ் வரும் தொழில்துறை மற்றும் சர்வதேச வர்த்தக மேம்பாட்டுக்கான அமைச்சகம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தரம் குறைந்த பொருள்களை உள்நாட்டிலேயே தயாரிக்கவோ அல்லது பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவோ உதவும் வகையில் ஒரு பட்டியலை தயாரித்துக் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பட்டியல் தயாரான உடன் அதிலுள்ள பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளை தொடர்பு கொள்வதோடு அவை இந்திய சந்தையில் எளிதாக நுழைய தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களையும் அவ்வளவு விரைவாக உள்நாட்டில் தயாரிக்கும் வகையில் உடனடியாக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியாது என்பதால் மாற்று ஏற்பாடாக தென் கொரியா, ஜப்பான் மற்றும் தைவான் போன்ற நாடுகளிலிருந்து அத்தகைய பொருட்களை இறக்குமதி செய்ய மோடி அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி திறன் முழுமையாக மேம்படுத்தப்படும் வரை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு பதிலாக பிற நாடுகளிலிருந்து தற்போதைக்கு அத்தியாவசியமான பொருட்களை இறக்குமதி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.