2023 - 24 நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 8.25 சதவீதமாக உயர்வு- ஆறு கோடி தொழிலாளர்களுக்கு அமோகமான பயன்!

2023 - 24 நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-02-11 15:45 GMT

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு நிதி ஆண்டும் நிதி சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படுகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழுவின் பரிந்துரையின் பெயரில் வட்டி விகிதத்தை மத்திய அரசு மாற்றி அமைக்கிறது. அந்த வகையில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மந்திரி பூபேந்திர யாதவ் தலைமையில் மத்திய அறங்காவலர் குழுவின் 235 வது கூட்டம் டெல்லியில்  நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் 2023- 24 நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.25 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. 2020 - 21 நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.50 சதவீதமாக இருந்தது. பின்னர் 2021 - 22-ல் அதிரடியாக 8.10 சதவீதமாக குறைக்கப்பட்டது. 1977-78 நிதி ஆண்டுக்கு பிந்திய காலத்தில் மிக குறைந்த வட்டி விகிதமாக அது இருந்தது. அதன் பிறகு 2022-23 பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டது .


இந்த சூழலில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது வட்டி விகிதம் 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆறுகோடி தொழிலாளர்கள் பயனடைவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் அரசாணையில் வெளியிடப்பட்டு பயனாளர்களின் கணக்குகளில் வட்டி தொகை வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Similar News