எல்லையில் இத்தனை களேபரத்திலும் மேலும் 32 சாலைகள் அமைக்க இந்தியா திடீர் முடிவு - சினத்தின் உச்சிக்கு செல்லும் சீனா!
எல்லையில் இத்தனை களேபரத்திலும் மேலும் 32 சாலைகள் அமைக்க இந்தியா திடீர் முடிவு - சினத்தின் உச்சிக்கு செல்லும் சீனா!
இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையில் சமீபத்தில் ஏற்பட்டு வரும் தொடர்ச்சியான மோதல்களுக்கு மத்தியில், சீன-இந்திய எல்லையில் நடந்து வரும் சாலை திட்டங்களை மத்திய அரசு ஆய்வு செய்ததுடன், அவற்றில் 32 பணிகளை வேகமாக முடிக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்துறை அமைச்சகம் கூட்டிய உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் மத்திய பொதுப்பணித் துறை, எல்லை சாலைகள் அமைப்பு மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறை இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
"சீனாவின் எல்லையில் உள்ள 32 சாலைத் திட்டங்களில் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் திட்டங்களை விரைவாக செய்து முடிப்பதில் தங்கள் ஒத்துழைப்பை வழங்கும்" என்று கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன - இந்திய எல்லையில் மொத்தம் 73 சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றில், எல்லைப்புற உள்கட்டமைப்பு தொடர்பான அனைத்து திட்டங்களும் உள்துறை அமைச்சகத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ், மத்திய பொதுப்பணித் துறை மற்றும் எல்லை சாலைகள் அமைப்பால் செயல்படுத்தப்படுகிறது.
ராணுவ மோதல் உச்சத்தில் உள்ள லடாக்கில் எல்லைப்புறங்களில் மூன்று முக்கிய சாலைகள் கட்டபப்ட ஏற்கனவே திட்டமிட்டு நடந்து வந்தாலும் மோதல்களை அடுத்து அந்த பணிகளும் துரிதப்படுத்தட்டு உள்ளதாக ஒரு அதிகாரி கூறினார்.
சாலைகள் தவிர, மின்சாரம், சுகாதாரம், தொலைத் தொடர்பு மற்றும் கல்வி போன்ற பிற எல்லை உள்கட்டமைப்புகளின் வளர்ச்சி தொடர்பான திட்டங்களுக்கும் இனிமேல் இந்தப் பகுதிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என கூறப்படுகிறது.