ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கோவில் திருவிழா!

திருமங்கலம் அருகே கோவில் திருவிழாவை ஒட்டி நூறு ஆடுகள் பலியிடப்பட்டு 10 ஆயிரம் ஆண்கள் பங்கேற்ற கறி விருந்து நடைபெற்றது.

Update: 2023-06-18 10:45 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செரிக்காம்பட்டி ஊராட்சி பெருமாள் கோவில்பட்டி கிராமத்தில் கரும்பாறை முத்தையா கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவில் பாரம்பரிய முறைப்படி ஆண்கள் மட்டுமே பங்கேற்கின்றனர் . விழாவில் பலியிடப்படுவதற்காக ஆடுகள் கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன. இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விலை நிலங்களில் செல்லும்போது முத்தையா சுவாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்து அந்த ஆடுகளை யாரும் விரட்ட மாட்டார்கள்.

கருமம்பாறை முத்தையா கோவில் திருவிழா நேற்று முன்தினம் காலை தொடங்கி நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் சாமிக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. இதை அடுத்து  நேர்த்திக்கடன் செலுத்தப்பட்ட 100 ஆடுகள் பலியிடப்பட்டன. பின்னர் 2500 கி அரிசியுடன் அசைவ உணவு  சமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுமார் 10,000 மேற்பட்ட ஆண்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது. வாழை இலையில் சாதமும் ஆட்டுக்கறி குழம்பு பரிமாறப்பட்டது. இதனை சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் பக்தர்கள் அப்படியே விட்டு செல்வது வழக்கம். ஒரு வாரத்திற்குப் பின்பு இலைகள் காய்ந்த பின்னரே பெண்கள் இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

இந்த கறி விருந்து திருமங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவானது சமூக நல்லிணக்கத்திற்காக நடத்தப்படுவதாகவும் குழந்தை வரம், வேலை வாய்ப்பு, உடல் ஆரோக்கியம் உட்பட பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேற நேர்த்திக்கடனாக ஆடுகளை கோவிலுக்கு வழங்குவதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

Similar News