மூன்றாவது மாதத்தில் "வந்தே பாரத்" திட்டம் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்பு - மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி!
மூன்றாவது மாதத்தில் "வந்தே பாரத்" திட்டம் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்பு - மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி!
சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதை அடுத்து, வெளிநாடுகளில் தங்க நேரிட்ட இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்கான "வந்தே பாரத்" இயக்கத்தின் பணி மூன்றாவது மாதத்தை எட்டியுள்ளது.
"கோவிட்-19" தொற்று காரணமாக பயணிகள் விமானப்போக்குவரத்து சர்வதேச அளவில் முடக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு நாடுகளுக்குச் சென்ற இந்தியர்கள் அந்தந்த நாடுகளிலேயே தங்க நேர்ந்துவிட்டது. அவர்கள் "வந்தே பாரத் இயக்கம்" (Mission Vande Bharat) மூலம் கடந்த மே 7ஆம் தேதி முதல் தாயகத்துக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.
"இதுவரை மொத்தம் 5 லட்சத்து 53 ஆயிரம் இந்தியர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து வந்தே பாரத் விமானங்கள், சிறப்பு விமானங்கள் (Charter Flights), கடற்படைக் கப்பல்கள் (Naval Ships), மூலமாகவும், எல்லை நாடுகளிலிருந்து தரை வழியாகவும் தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்" என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.
"தற்போது நான்காவது கட்ட வந்தே பாரத் இயக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் 137 நாடுகளிலிருந்து இந்தியர்களைக் கொண்டு வருவதற்காக 860 ஏர் இந்தியா விமானங்கள், 1256 சிறப்பு விமானங்கள், 8 கடற்படை கப்பல்கள் இயக்கப்படுகின்றன" என்றும் அவர் குறிப்பிட்டார்.
வழக்கமாக இயங்கிக் கொண்டிருந்த பயணிகள் விமானச் சேவை பொதுமுடக்கம் காரணமாக மார்ச் 23ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. அதையடுத்து வெளிநாடுகளில் தங்கியுள்ளவர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் இயக்கத்தை மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி முதல் கட்ட வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் மே 7ஆம் தேதி தொடங்கி மே 17ஆம் தேதி வரை 84 விமானங்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், பிலிப்பின்ஸ், சவுதி அரேபியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு இயக்கப்பட்டன.