மத்திய அரசு பணிகளில் சேர 70,000 பேருக்கு பணி நியமன ஆணை!
மத்திய அரசு பணிகளில் சேர 70, 000 பேருக்கு நியமன ஆணைகளை பிரதமர் மோடி வருகிற 16-ஆம் தேதி காணொளி காட்சி வாயிலாக வழங்குகிறார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 'ரோஜ்கார் மேளா' என்ற திட்டத்தின் கீழ் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு பணி வழங்கப்படும் என பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிவித்தார் . இந்தத் திட்டத்தின்படி மத்திய அரசின் மத்திய அரசின் துறைகளுக்கு நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு பல்வேறு கட்டங்களாக பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கி வருகிறார்.
அந்த வகையில் இதுவரை சுமார் மூன்று லட்சம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 'ரோஜ்கார் மேளா ' என்ற திட்டத்தின் கீழ் ஐந்தாவது கட்டமாக மேலும் 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார். வருகிற 16-ஆம் தேதி 22 மாநிலங்களில் 45 மையங்களில் நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் 70,000-க்கும் அதிகமான பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக வழங்குகிறார்.
2014 பொது தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற நாளை குறிப்பிடும் விதமாக மே - 16ஆம் தேதி பணி நியமன ஆணைகள் வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அனைத்து அமைச்சகங்களும் துறைகளும் தற்போதுள்ள காலியிடங்களை துரிதமாக நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் ஒவ்வொரு அமைச்சகத்திலும் பணி நியமனம் மற்றும் காலி பணியிடங்களை நிரப்புவதை மத்திய மந்திரிகளே கண்காணித்து வருகின்றனர் என்றும் அதிகாரிகள் கூறினர்.