சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மெரினாவில் உள்ள கடைகள் மாஃபியாக்களின் கட்டுப்பாட்டில் இருந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். மெரினாவில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்றும், அதற்கான பயனாளிகளை தேர்வு செய்ய ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியை நியமித்தும் உத்தரவிட்டனர்.
மெரினாவில் ஏற்கனவே கடைகளை வைத்திருந்த 600-க்கும் மேற்பட்டோர், இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். ஆனால், நீதிபதிகள், "மெரினாவை வியாபாரத் தலமாக மாற்ற ஒருபோதும் அனுமதிக்க முடியாது" எனக் கூறி, இந்த மனுக்கள் மீது பின்னர் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தனர்.
மெரினாவை அழகுபடுத்தி சுத்தமாக பராமரித்தால் மட்டுமே, இந்திய சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வருவர் என நீதிபதிகள் கூறினர். மேலும், மெரினா கடற்கரை ஒன்றும் வியாபாரத் தலம் அல்ல என்றும், அங்கு கடைகள் அமைப்பதை யாரும் உரிமையாக கோர முடியாது எனவும் தெரிவித்தனர்.