போலி பட்டா மூலம் ₹100 கோடி மதிப்பு அரசாங்க இடத்தை ஆக்கிரமித்த தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி குடும்பத்தினர் - தி.மு.க-வினரின் நில மோசடி அட்டகாசங்கள்
போலி பட்டா மூலம் ₹100 கோடி மதிப்பு அரசாங்க இடத்தை ஆக்கிரமித்த தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி குடும்பத்தினர் - தி.மு.க-வினரின் நில மோசடி அட்டகாசங்கள்
ஆற்காடு வீராசாமி மற்றும் அவர் குடும்பத்தினர் மீது பல ஆண்டுகளாக சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வரும் நிலையில், தற்போது சென்னை அண்ணா நகரில் அவர்கள் அபகரித்த ₹100 கோடி மதிப்புள்ள மாநகராட்சி நிலத்தையும் தமிழக அரசு கைப்பற்றியுள்ளது.
தி.மு.க ஆட்சி காலத்தில் மின்துறை அமைச்சராகவும், சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருந்தவர் ஆற்காடு வீராசாமி. இவர் அமைச்சராக இருந்த கால கட்டங்களில் தனது தம்பி தேவராஜ் பெயரில் ₹5.42 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முறைகேடான வகையில் வாங்கிக் குவித்ததாக இருவர் பேரிலும் சொத்துக்குவிப்பு வழக்கை மாநில ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை சென்ற 2012 ஆம் ஆண்டு பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில் தங்களை அந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி இருவரும் உயர்நீதி மன்றத்தில் மனு அளித்திருந்தனர். ஆனால் இருவர் மீதும் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கைப்படி முறைகேடான வகையில் சொத்துக்களை வாங்கிக் குவித்ததற்கான ஆதாரங்களும், சாட்சியங்களுடன் போலீசார் அளித்துள்ள பல தகவல்களும் தவறு நடந்ததற்கான வலுவான சாட்சியங்களாக பதிவாகி உள்ளதால் இந்த வழக்கிலிருந்து உங்களை விடுவிக்க முடியாது எனக் கூறிய உயர் நீதிமன்றம் இருவரும் தாக்கல் செய்திருந்த மனுவையும் தள்ளுபடி செய்தது.
அவ்வழக்கு தொடர்ந்து நடைபெறும் நிலையில் சமீபத்தில் ஆற்காட்டாரும், அவருடைய தம்பி தேவராஜும் அண்ணா நகரில் தாங்கள் நடத்தும் பள்ளி அருகே மாநராட்சிக்கு சொந்தமான ₹100 கோடி மதிப்புள்ள நிலத்தை வளைத்துப் போட்டு தவறான தகவல்களை தெரிவித்து அந்த இடத்துக்கு பட்டா பெற்ற விவரங்களும், நீதிமன்ற உத்தரவின்படி, அந்த இடத்தை மாநகராட்சி மீண்டும் கைப்பற்றிய செய்திகளும் தெரிய வந்துள்ளது.
அண்ணாநகர் 3-வது அவென்யூவில் இவர்களுக்கு சொந்தமான பப்ளிக் பள்ளி நடந்து வருகிறது. இந்த பள்ளி அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 1.4 ஏக்கர் நிலம் இருந்தது. ₹100 கோடி மதிப்புள்ள அந்த நிலத்தை கடந்த 1987-ஆம் ஆண்டு அபகரித்த தேவராஜ் 1997-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது அந்த இடத்துக்கான போலி பத்திரங்களை தயாரித்து பட்டாவும் வாங்கிவிட்டார். ஆனால் அதன் பின் வந்த அ.தி.மு.க அரசு மாநகராட்சி இடத்தை மீட்பதற்கான நீதிமன்ற நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. அவர்கள் மீது வழக்கும் போடப்பட்டது. இந்த நிலையில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இரு நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பில் ஆற்காடு வீராசாமியின் சகோதரர் தேவராஜன் முறைகேடாக கைப்பற்றிய 1.4 ஏக்கர் நிலம் மாநகராட்சிக்கு சொந்தமானதுதான் என தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை அடுத்து மாநகராட்சியினர் கடந்த 2 நாட்களாக அந்த நிலத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த சுற்றுச் சுவர்களை இடித்து தரைமட்டமாக்கினர். ₹100 கோடி மதிப்புள்ள அந்த இடத்தை மாநகராட்சி தன் வசமாக்கியது. தி.மு.க-வினரின் பிடியிலிருந்து நிலத்தை மீட்ட செய்தி அண்ணாநகர் மக்களுக்கு தெரிந்ததை அடுத்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போன்ற வழக்கு ஏராளமான தி.மு.க-வினர் மீது மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது என்றும் காலதாமதம் இல்லாமல் வழக்குகள் முடிக்கப்பட்டு பொது சொத்துக்கள் மீட்கப்பட்டு, காப்பாற்றப்பட வேண்டும் எனவும் பொது மக்கள் கூறினர். இது போன்ற விவகாரங்களை ஊடகங்கள் தெரியப்படுத்துவதில்லை என்றும் அப்படியே தெரியப்படுத்தினாலும் அவர்களின் பெயர்கள் வெளியே தெரியாமல் செய்திகளை பிரசுரித்து தவறு செய்பவர்களை கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களுமே காப்பாற்றுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.