CAA யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக அல்ல: யாரும் பயப்பட வேண்டாம்! பிரதமர் சந்திப்புக்குப் பின் உத்தவ் தாக்கரே பேட்டி
CAA யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக அல்ல: யாரும் பயப்பட வேண்டாம்! பிரதமர் சந்திப்புக்குப் பின் உத்தவ் தாக்கரே பேட்டி
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த தனது ஆதரவு நிலைப்பாட்டை மீண்டும் நேற்று பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் அழுத்தம் திருத்தமாக கூறினார்.
அப்போது அவர், புதிய குடியுரிமைச் சட்டம் அண்டை நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமையை வழங்குகிறது, அதே சமயம் எந்த இந்தியர்களின் குடியுரிமையையும் பறிப்பதற்கான சட்டம் அல்ல என்று திட்டவட்டமாக கூறினார்.
தாக்கரே மேலும் கூறுகையில், "குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி குறித்து நாங்கள் கலந்துரையாடினோம். இவற்றில் எனது நிலைப்பாட்டை நான் ஏற்கனவே எங்கள் கட்சி பத்திரிக்கையான சாம்னாவில் கூறியுள்ளேன். CAA க்கு யாரும் பயப்படக்கூடாது. இந்த சட்டம் யாரிடமிருந்தும் குடியுரிமையைப் பறிப்பதற்காக அல்ல, இது அண்டை நாடுகளில் உள்ள சிறுபான்மையினருக்கு வழங்கும் குடியுரிமை ஆகும் "
என்.ஆர்.சி சில குறிப்பிட்ட மாநிலங்களுக்குத்தான், நாடு முழுவதற்கும் அல்ல, எனவே குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைப் போல நாடு முழுவதும் என்.ஆர்.சியை சர்ச்சையாக்க வேண்டாம் என என்னிடம் பிரதமர் கேட்டுக் கொண்டார் எனவும், என்.ஆர்.சி சர்ச்சைக்குரிய ஒன்றாக இருக்காது என்று பிரதமர் மோடி தனக்கு உறுதியளித்துள்ளார் என்றும் உத்தவ் தாக்கரே செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
CAA மற்றும் NPR க்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் குறித்து உத்தவ் மேலும் கூறுகையில், புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை சிலர் விஷமத்தனமாக தூண்டி வருகின்றனர். அதனால் ஆர்பாட்டங்கள் நடைபெறுகின்றன என்றார்.
மேலும் 2019 நவம்பர் வரை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டிற்காக ரூ.15,558.05 கோடி நிலுவைத் தொகை கோரி மகாராஷ்டிரா அரசு மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளது. அந்த தொகையை விரைவில் வழங்கவும், மகாராஷ்டிரா அரசாங்கத்திற்கு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார் என்றும் அவர் கூறினார்.