கொரோனா குறித்த நிபுணர்கள் எச்சரிக்கை : பிரதமர் மோடி இன்று மத்திய அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் மீண்டும் அவசர ஆலோசனை.!
கொரோனா குறித்த நிபுணர்கள் எச்சரிக்கை : பிரதமர் மோடி இன்று மத்திய அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் மீண்டும் அவசர ஆலோசனை.!
நாட்டில் கொரோனா நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று 3 லட்சத்தை நெருங்கியது. அடுத்த 2 மாதங்களில் கொரோனா பரவல் மிகவும் அதிகமாக இருக்கும் என்றும், நாட்டில் ஐந்து மாநிலங்களில் சமூக பரவல் ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் அதிகம் தெரிவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா நோய் தொற்று பரவல் சூழல் குறித்து மத்திய அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி டெல்லியில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாட்டில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. நாட்டில் 3ல் இரண்டு பங்கு பாதிப்பு 5 மாநிலத்தில் மட்டுமே உள்ளது. பெரிய நகரங்களில் நோய் பரவல் அதிகரிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது' என கூறப்பட்டுள்ளது.
ஆனால், கொரோனா பரவலின் தீவிரம் குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்களுடன் மோடி ஆலோசித்தபோது, நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. வரும் 16, 17 தேதிகளில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் கொரோனா நிலவரம் குறித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளார். அதற்கு முன்பாக, நேற்றைய ஆலோசனையை அவர் நடத்தி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று மீண்டும் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும், நாளை முதல்வர்களுடன் ஆலோசித்தப் பிறகு நாட்டு மக்களுக்கு ஆற்ற உள்ள உரையில், புதிய ஊரடங்கு தொடர்பான உத்தரவுகளை அவர் பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.