வடசென்னை பகுதிகளில் ஊரடங்கை தீவிரமாக்க அதிவிரைவு படை வீரர்கள் குவிப்பு.!
வடசென்னை பகுதிகளில் ஊரடங்கை தீவிரமாக்க அதிவிரைவு படை வீரர்கள் குவிப்பு.!
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வைரசின் தாக்கம் அதிகமாக உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் சென்னை மாவட்டத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
இதனை தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் ஊரடங்கு மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால், இதனை சிலர் பெரிதாக பொருட்படுத்தாமலும், பாதுகாப்பு இல்லாமலும் மற்றும் கவசம் அணியாமலும் வெளியே சுற்றி வருகின்றனர். இதனால் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
சென்னையில் உள்ள வடசென்னை பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால் அப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் மற்றும் தெருகளில் சுற்றுபவர்களை கட்டுப்படுத்துவதற்காக இன்று முதல் வட சென்னை துணை ஆணையர் சுப்புலட்சுமி தலைமையில் உதவி ஆணையர் ஜூலியஸ் சீசர், ஆய்வாளர்கள் ரவி, கவிதா மற்றும் அதிவிரைவு படை ஆய்வாளர் பூமாறன் தலைமையில் 20க்கும் அதிகமான அதிவிரைவு படை வீரர்களை அப்பகுதிகளில் களம் இறங்கி உள்ளனர்.