"இந்தியாவில் தங்குங்கள், இந்தியாவில் படியுங்கள்" சிந்தனையைத் தூண்டும் நிகழ்ச்சி.!
"இந்தியாவில் தங்குங்கள், இந்தியாவில் படியுங்கள்" சிந்தனையைத் தூண்டும் நிகழ்ச்சி.!
"இந்தியாவில் தங்குங்கள், இந்தியாவில் படியுங்கள்" என்பது தொடர்பான சிந்தனையைத் தூண்டும் நிகழ்ச்சியை, மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம், தொடர்புடைய மூத்த அலுவலர்கள் மற்றும் தன்னாட்சி/தொழில்நுட்ப அமைப்புகளின் தலைவர்களோடு மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' புது தில்லியில் இன்று நடத்தினார்.
மனிதவள மேம்பாடு இணை அமைச்சர் திரு. சஞ்சய் தோத்ரேவும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். உயர் கல்விச் செயலாளர் திரு அமித் காரே, பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் திரு. டி.பி. சிங், அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக் குழுத் தலைவர் திரு. அனில் சகஸ்ரபுத்தே, இணைச் செயலாளர் (ஐசிசி) திருமதி. நீதா பிரசாத் மற்றும் இந்தியப் பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் திருமதி. பங்கஜ் மிட்டல் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கோவிட்-19 நிலைமையின் காரணமாக, வெளிநாடுகளில் படிக்க விரும்பிய பல மாணவர்கள் இந்தியாவிலேயே தங்கி, இந்தியாவிலேயே தங்கள் படிப்புகளைத் தொடர முடிவெடுத்துள்ளதாக தனது தொடக்க உரையில் திரு. பொக்ரியால் கூறினார்.
தங்களது படிப்புகளை முடிப்பதைப் பற்றிய கவலையோடு இந்தியாவுக்குத் திரும்பும் மாணவர்களின் எண்ணிகையும் அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
இந்த இரு பிரிவுகளில் உள்ள மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மனித வள மேம்பாடு அமைச்சகம் எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அக்கறை தேவைப்படும் இரு முக்கிய விஷயங்களை இந்த நிலைமை வழங்குவதாக அவர் தெரிவித்தார்:
1. வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல்:
இந்தியாவில் உள்ள முன்னணிக் கல்வி நிறுவனங்களில் தகுந்த கல்வி வாய்ப்புகளை வழங்கி அவர்களை இங்கேயே இருக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள்.
2. வெளிநாடுகளில் இருந்து திரும்பும் மாணவர்களின் கவலைகளை போக்குதல்:
தங்களது படிப்பை முடிக்க இந்த மாணவர்களுக்கு ஆதரவளித்தல்
அவர்களது தற்போதைய மற்றும் எதிர்காலக் கல்வித் தேவைகளைப் பற்றிய தெளிவான புரிதலும், சரியான நேரத்தில் சரியான இடையீடுகளுடன் அவர்களின் பணித் திட்டங்களைப் பூர்த்தி செய்தலும் இந்த விஷயங்களுக்குத் தேவைப்படுகிறது. மேற்கண்ட ஒவ்வொரு நிலைமையும் பல்வேறு வகையிலான வாய்ப்புகளையும், சவால்களையும் வழங்குகிறது என அவர் மேலும் கூறினார்.