விடுதலைப் போராட்டத்தின் முப்பெரும் தலைவர்களில் ஒருவரான பால கங்காதர திலகரின் பிறந்த தினம் இன்று!
விடுதலைப் போராட்டத்தின் முப்பெரும் தலைவர்களில் ஒருவரான பால கங்காதர திலகரின் பிறந்த தினம் இன்று!
"சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை நான் அடைந்தே தீருவேன்" என்று முழங்கிய பால கங்காதர திலகரின் பிறந்த தினம் இன்று. இந்திய விடுதலைப் போராட்டத்தின் முப்பெரும் தலைவர்களான பால், லால், பால் (Lal, Bal, Pal) ஆகியோர்களில் ஒருவராவார். மற்ற இருவர் பிபின் சந்திர பால் மற்றும் பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் ஆகியோராவர். லோகமான்ய திலகர் அதாவது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் என்று மக்களாலும், Father of Indian unrest என்று பிரிட்டிஷ் அதிகாரிகளாலும், 'நவீன இந்தியாவை உருவாக்கியவர்' என காந்தியாலும் அழைக்கப்பட்டார்.
அவர் வாழ்க்கையையும், பங்களிப்பையும் குறித்து இன்று நினைவு கூர்வோம். அப்போதைய பம்பாய் மாகாணத்தில், ரத்தினகிரி மாவட்டத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் கேஷவ கங்காதர திலகர் ஆக பிறந்தார். தன் அன்னையால் பாலா என அன்புடன் அழைக்கப்பதால் தன் பெயரின் முன்னால் அதை சேர்த்துக் கொண்டார். தன் பதினாறு வயதிற்குள் தந்தையை இழந்தவர், கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.முதுகலைப் படிப்பை படிப்பை பாதியில் விட்டுவிட்டு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்று சட்டப் படிப்பை தொடர்ந்தார். பிறகு ஒரு பள்ளியில் கணித ஆசிரியராக தொடர்ந்த அவர் தன்னுடன் வேலை பார்த்தவர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல் தொடர்பாக வேலையை விட்டு வெளியே வந்து பத்திரிக்கையாளர் ஆனார். தன் கல்லூரி நண்பர்கள் சிலருடன் இணைந்து ஒரு பள்ளியைத் தொடங்கினார். இந்திய தேசிய சிந்தனைகளுடன் சேர்ந்த நல்ல படிப்பை இளைஞர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த பள்ளி உருவானது. அந்த பள்ளியின் வெற்றியை தொடர்ந்து 'டெக்கான் கல்வி சமூகம்' என்ற அமைப்பை உருவாக்கி அந்நிறுவனங்கள் விரிவடைந்தன. இதைத்தொடர்ந்து இந்திய தேசிய விடுதலைக்காகவும் பாடுபடத் தொடங்கினார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில், காந்திக்கு முன்பாக நாடு முழுவதும் அறியப்பட்ட தலைவர் திலக் ஆவார்.1890ல் அவர் காங்கிரஸில் இணைந்தார். பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியாவிற்கு முழு சுயராஜ்யம் வேண்டும் என்று அறிவுறுத்தியதால் அவர் காங்கிரஸில் தீவிர தேசியவாதியாக அறியப்பட்டார்.
இரண்டு பிரிட்டிஷ் அதிகாரிகள் 1897-ல் புனேவில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கு தன்னுடைய 'கேசரி' பத்திரிக்கையில் வெறுப்பு பேச்சுக்களின் மூலம் தூண்டி விட்டதாகவும், கொலைகாரர்களின் அடையாளத்தை மறைத்து வைத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டு பாலகங்காதர திலகருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.