பா.ஜ.க வெற்றிக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் ரகசியப்பணியா? கொந்தளிக்கும் மம்தா பானர்ஜி!

பா.ஜ.க வெற்றிக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் ரகசியப்பணியா? கொந்தளிக்கும் மம்தா பானர்ஜி!

Update: 2019-05-09 05:45 GMT

திருணாமுல் காங்கிரசை தோற்கடித்து அதன் மூலம் எனது ஆட்சியை கவிழ்க்க கம்யூனிஸ்ட் சி.பி.எம் கட்சியினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, சி.பி.எம் பூத்  தொண்டர்கள் வீடு வீடாக சென்று தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் பா.ஜ.க-வுக்கு வாக்களித்து மம்தாவை தோற்கடியுங்கள் என பிரச்சாரம் செய்து வருவதாகவும், பா.ஜ.க-வுடன் அவர்கள் ரகசிய உறவு வைத்துக் கொண்டு பணியாற்றுவதாகவும், அதனால் திருணாமுல் காங்கிரசார் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும் என தனது தொண்டர்களுக்கு மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்து வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. 


இப்பத்திரிகை மேலும் கூறுகையில், மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகள் 36 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தங்களை காலி செய்துவிட்ட மம்தாவை தோற்கடிக்க இதுதான் சரியான தருணம் என்றும் இதனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் களப்பணிகளில் பா.ஜ.க-வுக்கு உதவும் வகையில் பல தொகுதிகளில் வீடு, வீடாக சென்று தாமரைக்கு வாக்களிக்க சி.பி.எம் அடிமட்ட தொண்டர்கள் ரகசிய பணியாற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக பா.ஜ.க-வுக்கு அமைப்பு ரீதியாக வலு இல்லாத தொகுதிகளில் மம்தா கட்சி வெற்றி பெறக் கூடாது என்பதால் கம்யூனிஸ்டுகள் இவ்வாறு செய்வதாகவும் கூறியுள்ளது.


உதாரணமாக கொல்கத்தா வடக்கு தொகுதியில் திருணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரான சுதிப் பந்தோப்தியா போட்டியிடுகிறார். இவரை எப்படியாவது தோற்கடிக்க பா.ஜ.க விரும்புகிறது. ஆனால் இங்கு மொத்தமுள்ள 1,862 பூத்துகளில் வெறும் 500 பூத்துகளில் மட்டுமே பா.ஜ.க ஏஜண்டுகள் உள்ள நிலையில், கம்யூனிஸ்டுகள் மீதம் உள்ள இடங்களில் தன்னிச்சையாக பா.ஜ.க தொண்டர்களுக்கு உதவி வருவதாக செய்தி வெளியிட்டுள்ளது.  


மேற்கு வங்கத்தில் எங்கு பார்த்தாலும் பா.ஜ.க-வுக்கு ஆதரவான மக்கள் சக்தியை பார்க்க முடிந்தாலும், கட்சி அமைப்பு சில இடங்களில் பலகீனமாக உள்ளதால் வாக்கு சேகரிப்பு சவாலான பணியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அனைத்து தடைகளையும் மீறி, பா.ஜ.க-வால் மேற்கு வங்கத்தில் மிகப்பெரிய திருப்புமுனை இந்த தேர்தல் மூலம் ஏற்படும் என கூறப்படுகிறது.


Similar News