ஊரடங்கிலிருந்து 16 தொழில்களுக்கு விலக்களிப்பது மிகவும் ஆபத்தானது - அன்புமணி ராமதாஸ்
ஊரடங்கிலிருந்து 16 தொழில்களுக்கு விலக்களிப்பது மிகவும் ஆபத்தானது - அன்புமணி ராமதாஸ்
ஊரடங்கிலிருந்து 16 தொழில்களுக்கு விலக்களிப்பது மிகவும் ஆபத்தானது!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு ஆணையை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை அனைத்து மாநில அரசுகளும் ஒரே குரலில் வலியுறுத்தி வரும் நிலையில், 16 வகையான தொழில்களுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறைக்கு தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறை செயலர் கடிதம் எழுதியிருக்கிறார். வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைப்பதற்கு சமமான இந்த யோசனை நிராகரிக்கப்பட வேண்டும்.
மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லாவுக்கு தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறை செயலர் குருபிரசாத் மகோபாத்ரா எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தவும், மக்களின் கைகளில் பணம் புழங்குவதை உறுதி செய்யவும் உர ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகள் உள்ளிட்ட 16 வகையான தொழிற்சாலைகளை இயக்க வசதியாக ஊரடங்கு ஆணையிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். தொழில் மற்றும் வணிகம் சார்ந்த பெரும்பான்மையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்றும் யோசனை வழங்கியுள்ளார். இவை தவறான நேரத்தில் முன்வைக்கப்படும் மிகத் தவறான யோசனைகள் ஆகும். இந்த கோரிக்கைகளை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கக் கூடாது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மத்திய அரசு முதற்கட்டமாக அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கில், இன்றுடன் 20 நாட்கள் முடிவடையும் நிலையில், நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது என்பது உண்மை தான். அதேநேரத்தில் நோய்ப்பரவல் இன்னும் உச்சத்தை அடைந்து குறையத் தொடங்கவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சராசரியாக ஆயிரம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. இந்த நிலை நீடிக்குமா... குறையத் தொடங்குமா? என்பதை அறிய இன்னும் சில நாட்கள் ஆகலாம். அடுத்த சில நாட்களில் நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தொழிற்சாலைகளின் இயக்கத்தைத் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று கோருவது நிலைமையின் தீவிரத்தை உணராமல் எடுக்கப்பட்ட முடிவாகவே தோன்றுகிறது.