நாட்டுபடகு மீனவ குழுக்களுக்கு செயற்கைகோள் தொலைபேசிகள் - 66 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் கம்பியில்லா தகவல் தொடர்பு
நாட்டுபடகு மீனவ குழுக்களுக்கு செயற்கைகோள் தொலைபேசிகள் - 66 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் கம்பியில்லா தகவல் தொடர்பு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கடலோர பேரிடர் அபாயம் குறைப்புத் திட்டத்தின்(CDRRP)” நிலைத்த வாழ்வாதாரத்திற்கான மீன்வள மேலாண்மை திட்டத்தின் கீழ் (FIMSUL-II) 66 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கு 5 வாட் VHF கையடக்க கருவிகளும், விசைபடகு மீனவர்களுக்கு 25 வாட் VHF கருவிகளும் வழங்கிடும் அடையாளமாக 5 மீனவப் பயனாளிகளுக்கு VHF கருவிகளை வழங்கி, இத்திட்டத்திற்கான தொடங்கி வைத்தார்.
மேலும், தொலை தொடர்பு கோபுரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாட்டினையும் துவக்கி வைத்தார். மேலும், 3 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் மீனவக் குழுக்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள் மற்றும் நேவ்டெக்ஸ் கருவிகள் வழங்கிடும் அடையாளமாக 10 மீனவக் குழுக்களுக்கு அக்கருவிகளையும் வழங்கினார்.
இத்திட்டத்தின் கீழ், 66 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் கம்பியில்லா தகவல் தொடர்பு ஏற்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்காக இயந்திரம் பொருத்தப்பட்ட 15,004 நாட்டுப்படகுகளுக்கு 100 விழுக்காடு மானியத்தில் 5 வாட் VHF கையடக்க கருவிகளும். 2535 விசைபடகுகளுக்கு 75 விழுக்காடு மானியத்தில் படகில் பொருத்தக்கூடிய 25 வாட் VHF கருவிகளும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களை உள்ளடக்கிய 1076 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரை பகுதிகளில், திருவள்ளூர் மாவட்டம் – பழவேற்காடு, சென்னை – காசிமேடு, காஞ்சிபுரம் மாவட்டம் – நெமிலி, விழுப்புரம் மாவட்டம் – மரக்காணம், கடலூர் மாவட்டம் – பரங்கிப்பேட்டை, நாகப்பட்டினம் மாவட்டம் – நாகப்பட்டினம், தரங்கம்பாடி மற்றும் கோடியக்கரை, புதுக்கோட்டை மாவட்டம் – கட்டுமாவடி, தூத்துக்குடி மாவட்டம் – வேம்பார் மற்றும் புன்னக்காயல், திருநெல்வேலி மாவட்டம் – உவரி, கன்னியாகுமரி மாவட்டம் – குளச்சல் மற்றும் சின்னமுட்டம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தொலை தொடர்பு கோபுரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாட்டினை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி துவக்கி வைத்தார்