காங்கிரசுக்கு அடிமை போல் வேலை செய்தேன் - கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி பகிரங்க பேட்டி : வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்!
காங்கிரசுக்கு அடிமை போல் வேலை செய்தேன் - கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி பகிரங்க பேட்டி : வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்!
14 மாதங்கள் காங்கிரசுக்கு அடிமை போல் வேலை செய்தேன் என்றும், காங்கிரஸ் கூட்டணியை எங்கள் கட்சியினர் விரும்பவில்லை என்றும் குமாரசாமி கூறினார்.
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு நடந்து வந்தது. இந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து கவிழ்ந்தது. இதையடுத்து முதலமைச்சர் குமாரசாமி கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜனதா தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது. எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றார். அமைச்சர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் குமாரசாமி ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி அளித்துள்ளார். அதில், நான் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணிக்கு தலைமை ஏற்று முதல்வராக பணியாற்றினேன். கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் வாரிய தலைவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தேன். ஆனால் பதவி விலகிய எம்.எல்.ஏ.க்கள் ஏன் என்னை விமர்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
நான் முதல்வராக இருந்த 14 மாதங்கள், பதவி விலகிய எம்.எல்.ஏ.க்களுக்கும், காங்கிரசுக்கும் அடிமை போல் வேலை செய்தேன். இவ்வாறு பணியாற்றியபோதும், அவர்கள் ஏன் என்னை விமர்சனம் செய்கிறார்கள். ஏன் என்று எனக்கு தெரியவில்லை. கூட்டணி அரசு அமைக்க முடிவு செய்தபோது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் இதை விரும்பவில்லை.
காங்கிரஸ் தலைமை, ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைக்க இதயபூர்வமாக விரும்பியது. அக்கட்சியை சேர்ந்த சில உள்ளூர் தலைவர்கள் இதை விரும்பவில்லை என்பது எனக்கு தெரியவந்தது. கூட்டணி ஆட்சி அமைந்த முதல் நாளில் இருந்து காங்கிரசை சேர்ந்த சில தலைவர்கள், எவ்வாறு நடந்து கொண்டனர், எப்படி பேசினர் என்பது அனைவருக்கும் தெரியும்.
எங்கள் கட்சியை விட காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு தான் அதிக நிதியை ஒதுக்கினேன். முன்கூட்டியே நேரம் கேட்டு அனுமதி பெறாமல் வந்தபோதும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சந்தித்தேன். அவர்கள் கூறிய வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு கண்டேன்.