விநாயகரையும், யானை வடிவத்தையும் தெய்வீகமாக வழிபடும் போக்கிற்கு சங்க இலக்கியத்திலேயே ஏராளமான தரவுகள் உண்டு. சங்க இலக்கியத்தில் இது குறித்து இரண்டு விநோதமான குறிப்புகள் உள்ளன, அவை நேரடியாக விநாயகரை குறிக்க வில்லை என்றாலும் தமிழ் ஆன்மீக கலாச்சாரத்தில் யானை-தலை கடவுளுக்கென இருந்த தொன்மையான வேரை மிக அழகாக படம்பிடித்து காட்டுகின்றது.
அதில் ஒரு பாடல், கபிலரால் பாடப்பெற்றது. தமிழ் தலைவன் பாரியின் பெருந்தன்மை குறித்து பாடுகிற போது கபிலர் சொல்கிறார், "எல்லோராலும் மதிப்பற்றது என ஒதுக்கப்படும் எருக்கம்பூவை கடவுள் ஏற்றுக்கொள்வதை போல, பாரி பிறரால் மதிப்பற்றவர்கள் என ஒதுக்கப்படும் மக்களுக்கே கொடைகளை அள்ளி வழங்குகிறார்" என குறிப்பிடுகிறார். இன்று தமிழகத்தில் எருக்கம் பூ விநாயகரின் விருப்பபூக்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.
கணபதி என்கிற கடவுள் பழங்காலம் தொட்டே தமிழகம் அறிந்த தெய்வமாக இருந்திருப்பார் என தாம் கருதுவதாக கல்வெட்டு ஆய்வாளர் திரு.எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். சங்க இலக்கியத்தின் மற்றொரு அங்கமான பரிபாடலில், அக்காலத்தில் யானைகள் எவ்வாறு தெய்வாம்சத்துடன் வணங்கப்பட்டன என்கிற குறிப்புகளையும், நல்ல கணவனை இறைவனிடம் வேண்டுகிற இளம்பெண்கள் கோவில் யானைகளுக்கு கொடுத்த மீதி அரிசி கவளங்களை உண்டதையும் குறிப்பிட்டுக்காட்டுகிறது. அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கையில் சங்க காலம் தொட்டே யானைகள் தெய்வாம்சம் மிக்கவையாக வழிபடப்பட்டதற்கான அனைத்து சாத்திய கூறுகளும் உள்ளன(ஹராப்பா – வேத காலம் முதல் சங்க காலம் வரை கணபதி குறித்த விரிவான
தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்).
பிள்ளையார்பட்டி கோவில் அறிஞர்களால் ஆறாம் நூற்றாண்டை சார்ந்தது என கருதப்படுகிறது. இங்கே யானை முகத்தோன் இரண்டு கரங்களை கொண்டிருப்பதாகவும் மற்றும் கல்வெட்டு ஆவணங்களின் மூலம் இந்த அரும்பெரும் சிற்பி எருக்காட்டூரை சேர்ந்தவர் எனவும் அறிய முடிகிறது.
மேலும், விழுப்புரம் அருகே உள்ள கிராமமான ஆலகிராமத்தில் இருக்கும் நான்காம் நூற்றாண்டு கல்வெட்டுடன் ஓர் விநாயகர் சிலை உள்ளது. அங்கே யானை முகத்தோன் கல்லாலேயே செதுக்கப்பட்டுள்ளார். அச்சிலையின் உயரம் 75 செ.மீ மற்றும் அதன் அகலம் 40 செ.மீ ஆகும் மற்றும் புனித நூலை அணிந்த நிலையில் இரண்டு கரங்களுடன் அமர்ந்திருக்கிறார் கணேசர். இதன் மூலம் பழங்கால தமிழகத்தில் விநாயகர் வழிபாடு என்பது நன்கு பழக்கப்பட்ட ஒன்றாக இருந்தது தெளிவாகிறது.
ஆனால் கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மஹாதேவன் இது தொடர்பான வரிசையில் ஓர் சுவாரஸ்யமான பக்கத்தை காட்டுகிறார். அதாவது பிள்ளையார்பட்டி விநாயகரின் கீழ் இருந்த கல்வெட்டை அவர் "எருக்காட்டூரின் கவி" என படித்ததாகவும், அதை டாக்டர். நாகசுவாமி அவர்கள் அது கவி அல்ல சிறந்த சிற்பி அல்லது தச்சன் என திருத்தியதாகவும் கூறப்படுகிறது. இதன் பிராய்சித்தமாக டாக்டர் மஹாதேவன் மீண்டும் அந்த கல்வெட்டுகள் இருந்த இடத்திற்கு சென்று மிகவும் கவனமாக ஆய்வு மேற்கொண்டார். தமிழ் இலக்கணம் கல்வெட்டுகளிலும், பிரகடன ஆணைகளிலும் உள்ள எழுத்துகளின் மீது புள்ளி வைப்பதற்கு மிகுந்த முக்கியத்துவத்தை அளித்து வந்த போதும், இது போன்ற புள்ளி வைத்த எழுத்துக்களை எப்போதாவது தான் காண கல்வெட்டுக்களில் காண முடியும். இது தமிழ் கல்வெட்டாய்வாளர்களுக்கு பெரும் பிரச்சனைக்குரிய அம்சமாக இருந்தது. இச்சூழலில், திரு.மஹாதேவன் பிள்ளையார்பட்டியில் இருக்கும் கல்வெட்டுக்களில் மறு ஆய்வு மேற்கொண்ட போது தமிழ் கல்வெட்டுகளில் முதல் முறையாக அவர் புள்ளி பயன்படுத்தப்பட்ட எழுத்துக்களை கண்டார். அதன் பிறகு, சில இடங்களில் இருக்கும் கல்வெட்டுகளில் புள்ளி இட்ட எழுத்துக்களை கண்டிருக்கிறார். இந்த சம்பவத்தின் மூலம் மிகவும் நெகிழ்ந்து போன மஹாதேவன் இவ்வாறு எழுதினார்:
தமிழ் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சியில் தமிழ் கல்வெட்டாய்வாளர்கள் சந்தித்து வந்த ஆழமான பிரச்சனைக்கு தீர்வினை தந்துள்ளார் "கற்பக விநாயகர் கணேசர் எங்கள் மீது காட்டிய கருணைக்கு பூஜைகள் செய்து கோவிலிலிருந்து பின் திரும்பினோம்". (ஐராவதம் மஹாதேவன், புள்ளி தந்த பிள்ளையார், செப்டம்பர் 5, 1997 தினமணி)
தமிழ்நாடு திராவிட இயங்க்கங்களால் உந்தப்பட்டு கடுமையான கலாச்சார அறியாமையினால் தவித்து வரும் தமிழ் பிரிவினைவாதிகளான சீமான் மற்றும் திருமுருகன் காந்தியை விடவும் ஆரிய கடவுள் என அழைக்கப்படும் கணேசர் உண்மையான தமிழ் பாரம்பரியத்தை கண்டறிவதற்காக மிக நிச்சயமாக தன் பங்களிப்பை அளித்துள்ளார் என்பதை உறுதியுடன் கூறலாம்.
காலத்தால் உரைந்து போகாத ஒரு மதத்தில். ஹிந்துத்துவத்தில் கடவுள்கள் உருவாகி கொண்டே இருக்கின்றனர். ஆனால் கணேசரை பொருத்த வரை, அவர் தமிழ் ஆன்மீக மரபில், சைவம் மற்றும் தாந்திரீக ஆன்மீக பாரம்பரியத்தின் அடிப்படையில் ஓர் ஒருங்கிணைந்த அம்சமாகவே இருக்கிறார்.
தமிழ் பக்தி மறைபொருள் பாரம்பரியத்தில் கணேசர் இந்தியாவின் ஒருமைப்பாட்டின் ஆழமான குறியீடாக இருந்திருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் கணேசரை குறித்து ஒலிக்கும் மிகவும் பிரபலமான துதிப்பாடல் ஒன்று உண்டு. இது பதினைந்தாம் நூற்றாண்டின் பெரும் ஆளுமையான அருணகிரி நாதரால் உருவாக்கப்பட்டது. இவர் இசைத்தமிழுக்கு புத்துயிர் ஊட்டியவர். இந்த ஆகப்பெரும் ஞானி கணேசர் தன் தந்தத்தை உடைத்து மேரு மலையில் அதை பதிந்தமைக்காவும், மஹாபாரதத்தை எழுதியதை புகழும் விதமாகவும் இப்பாடலை அவர் உருவாக்கியிருப்பார். ஆனாலும் கூட மேரு மலையில் அவர் மஹாபாரதத்தை பதிந்த வேளையில் அதனுடே தமிழின் முப்பரிமாண சாரத்தை கண்டார். தமிழின் சாரமும், மஹாபாரதத்தின் சாரமும் ஒன்றாகவே அமையும்படி அதனை வடித்தளித்தார் என்ற கண் கொண்டு இந்த சம்பவத்தை நோக்குகிறார் அருணகிரிநாதர்.
https://www.youtube.com/watch?v=RnXTJ4AlVb8
14-ஆம் நூற்றாண்டின் மறைபொருள் நூலான விநாயகர் அகவல் அவ்வையாரால் எழுதப்பட்டது. பல அவ்வையார்கள் பலதரப்பட்ட காலத்தில் வாழ்ந்ததாக சொல்லப்படும் வேளையில் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரே ஆளுமையாக தமிழின் பிரமாண்ட கதைகளில் சொல்லப்படும் வேளையில் ஒட்டுமொத்த தமிழ் மனங்கள் அவ்வையாரை விநாயகரின் தீவிர பக்தையாகவே கண்டது. பெரும் ஞானியான சுந்தரர், சிவனின் அதித்தீவிர பக்தர், இவர் சிவனின் உறைவிடமான கைலாஷத்திற்கு செல்ல முடிவு செய்தார். அவ்வையாருக்கும் அந்த ஆசை இருந்தது. அச்சமயத்தில் தன்னை குறித்து ஒரு பாடல் பாடினால் சுந்தரரை விடவும் விரைவாக அவ்வையாரை கைலாசத்தில் கொண்டு சேர்ப்பதாக விநாயகர் வாக்களித்தாராம். அதன் விளைவாய் பிறந்தது தான் விநாயகர் அகவல்.
இந்த பாடல் பகுதி தமிழகத்து குழந்தைகளால் பரவலாக மனப்பாடம் செய்யப்படும் பகுதியாக இது உள்ளது, அவர்களோடு சேர்ந்தே இப்பகுதியும் வளர்கிறது. இந்த பாடலில் இந்தியாவின் மறைபொருள் ஞானம் உட்பொதிந்திருக்கிறது.
அந்த இசையில் தோய்ந்த பாடலின் சில பகுதிகள் இங்கே:
“பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்”
https://www.youtube.com/watch?v=XkdYR4hMzEA
யானைமுகத்தோன், பானை வயிரோன் மற்றும் அன்பு பொதிந்த இந்த தெய்வ குழந்தையின் மூலமாக நம் பாரம்பரியத்தில் எத்தனை ஆழமாக விநாயகர் வேரோடி போயிருக்கிறார் என்பதை ஒருவர் மிகத்தெளிவாக கணிக்க முடியும். குறைந்தபட்சம் 1500 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் மக்கள் விநாயகரை சுய ஞானம், கலை, பாரம்பரிய மற்றும் இசை தொடர்பான வடிவமாக அவரை வழிபட்டு வந்துள்ளனர். மேலும், அவருக்கு பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டு அவரை பேரானந்தத்தில் ஆழ்த்தியுள்ளனர். விநாயகருக்கு பிடித்த உணவுகளை அருணகிரிநாதர் கீழ்வருமாறு பட்டியலிடுகிறார்
"கரும்பு, அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், அவல், துவரை, இளநீர், தேன் வகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிபழம், பல வகையான மாவு பழங்கள், ஒப்பற்ற கிழங்குகள், சிறந்த உணவு வகைகள், கடலை வேகவைத்த அரிசி மற்றும் உலர்பழங்கள்" - பக்கரை விசித்திரமணி திருப்புகழ்.
https://www.youtube.com/watch?v=U9CM142K1YA
ஓங்கி வளர்ந்த ஆன்மீக பாரம்பரியம், உள்ளுணர்வின் மீதான ஆழமான புரிதல், குழந்தைகளுக்கு குதூகலத்தை தருகிற தன்மை மற்றும் சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சி என புனிதமான தெய்வமாக அனைத்து தரப்பிலும் வெளிப்படுகிறார் விநாயகர். மிகவும் எளிமையான பொருட்களான மாட்டுச்சாணம் மற்றும் மஞ்சள் கலவையின் மூலம் தன்னை வெளிப்படுத்தி கொள்ளும் தன்மை கொண்டவர். ஒளியை கண்டு அச்சப்படுகிறவர்கள் நிச்சயம் இவரை கண்டு அஞ்ச வேண்டும்.
எங்களை போன்ற தமிழர்களுக்கு, விநாயகர் இழக்கவோ துறக்கவோ முடியாதவர்; எங்கள் பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த அங்கமவர்.
This article is a translated article written by Aravindan Neelakantan for
Swarajya Magazine.