பத்தாண்டுகளில் ஜன்தன் திட்டத்தின் கீழ் அபரிமிதமான வளர்ச்சி!

ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் இந்த திட்டத்தின் மூலம் 53 கோடிக்கும் அதிகமான வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-08-29 16:24 GMT

இந்தியாவில் ஏழைகள் பலர் வங்கி கணக்கு இன்றி இருந்த நிலையில் அனைவரும் வங்கி கணக்கை தொடங்குவதற்காக கடந்த 2014- ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஜன்தன் யோஜனா என்ற திட்டத்தை தொடங்கினார். இந்த திட்டத்தின் மூலம் குறைந்த இருப்புத் தொகை இன்றி வங்கி கணக்கை பராமரிக்க முடியும். இதன் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்கள் முறையான நிதி அமைப்புக்குள் கொண்டுவரப்பட்டனர். இந்த திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 53.13 கோடி பேர் திட்டத்தின் மூலம் வங்கி கணக்கு தொடங்கியுள்ளனர்.

இதில் சுமார் 30 கோடி பேர் பெண்கள். இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கியவர்கள் தங்கள் கணக்குகளில் ரூபாய் 2.31 லட்சம் கோடி இருப்பு வைத்துள்ளனர். அரசு நிதி உதவிகள் பயனர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும் நிலையில், ஜன்தன் திட்ட கணக்குகள் மூலமாக ரூபாய் 39 லட்சம் கோடி நேரடி பண பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் இதன் காரணமாக 3.48 லட்சம் கோடி விரயமாவது தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜன்தன் திட்டத்தில் வங்கி கணக்கு தொடங்கியவர்களில் 36.14 கோடி பேருக்கு ஏ.டி.எம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஜன்தன் திட்டத்தின் மூலம் கணக்கு தொடங்கியவர்களில் 66.6 சதவீதம் பேர் கிராமப் பகுதிகளை சேர்ந்தவர்கள். 55.6% பேர் பெண்கள் இந்த நிலையில் திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதன் மூலம் 53 கோடிக்கு அதிகமான வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டதற்கு பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது.ஜன்தன் திட்டம் தொடங்கப்பட்டதன் பத்தாம் ஆண்டு என்பது ஒரு முக்கிய தருணத்தை குறிக்கிறது. அனைத்து பயனாளிகளுக்கும் வாழ்த்துக்கள். இத்திட்டம் வெற்றியடைய உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள். நிதி உள்ளடக்கத்தை அதிகரிப்பதிலும் கோடிக்கணக்கான மக்களுக்கு குறிப்பாக பெண்கள், இளைஞர்கள், மற்றும் விளிம்புமுனை சமூகங்களுக்கு கண்ணியம் அளிப்பதிலும் ஜன்தன் திட்டம் முதன்மையானது .இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்திய மிகப்பெரிய திட்டம் ஜன்தன் யோஜனா திட்டம். இத்திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களை பொருளாதார ரீதியாக மேம்பாடு அடையச் செய்து கூட்டு பொருளாதாரத்தின் மூலம் அவர்களின் கனவுகளுக்கு வலிமையை ஏற்படுத்தி இருக்கிறார்" என கூறியுள்ளார்.

Tags:    

Similar News