ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் பயனடைந்த லட்சக்கணக்கான மக்கள்- மருத்துவத்துறையில் மாஸ் காட்டும் மோடி அரசு!
ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 68.43 லட்சம் பேருக்கு மருத்துவமனைகளில் புற்றுநோய் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா தெரிவித்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் ரூபாய் 13 லட்சத்து 160.75 கோடியில் புற்றுநோய் தொடர்பான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜட்ஜார் கிளை வளாகத்தில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் இரண்டாவது எய்ம்ஸ் புற்றுநோயியல் மாநாட்டை அவர் நேற்று தொடங்கி வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது :-
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை வழங்கப்படுவது அதிகரித்திருப்பதாக லான்செட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள புற்றுநோயாளிகளில் 90 சதவீதம் பேருக்கு 30 நாட்களுக்குள் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 217 அம்ரித் மருந்தகங்களில் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் மலிவான விலையில் வழங்கப்படுகிறது .அந்த மருந்தகங்களில் 289 புற்றுநோய் மருந்துகள் 50 சதவீத தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன.
இதன் மூலம் 5.8 கோடி பயனாளர்களுக்கு ரூபாய் 6567 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சைக்கான தினசரி மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக 200 மையங்கள் இந்த ஆண்டு தொடங்கப்பட உள்ளன. கிராமப்புறத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே சிகிச்சை வழங்கும் நோக்கில் இந்த மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. பல்வேறு வகையான புற்று நோய்களை கண்டறியும் விதமாக தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்களில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி 26 கோடி பேர் வாய் புற்றுநோய்க்கான பரிசோதனையும் 14 கோடி பேருக்கு மார்பக புற்று நோய்க்கான பரிசோதனையும் ஒன்பது கோடி பேருக்கு கருப்பை வாய் புற்று நோய்க்கான பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. 22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 14.5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோய் பாதிப்பை குறைக்கும் அதே சமயத்தில் அந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு உள்ளூரிலேயே சிகிச்சை வழங்குவது அவசியம். அந்த வகையில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது முதல் 68.43 லட்சம் பேருக்கு 13,160.75 கோடியில் புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.